Tuesday, May 30, 2017

புதுமையான போப்!

  "உலம்  முழுவதும்  தீவிரவாதம்  உள்பட  பல்வேறு  பிரச்னைகள்  நிலவுகின்றன.  இந்த  பிரச்னைகளைத்  தீர்க்க,  நம்  ஒவ்வொருவருக்கும்  நேர்மையும்  அரவணைத்துச்  செல்லும்  குணமும்  தேவைப்படுகிறது."  என்று  கிறிஸ்துமஸ்  வாழ்த்தில்  சொன்ன  போப்  பிரான்ஸிஸ்  குடும்ப  ஒற்றுமைக்காகவும்  ஒரு  அமைப்பையே  ஏற்படுத்தியுள்ளார்.  இவர்  இதுவரை  இருந்த  போப்புகளிலேயே  பல  புதுமைகளைச்  செய்தவர்.
      குறிப்பாக,  ஐரோப்பிய  நாடுகளைச்  சேர்ந்தவர்களே  போப்  ஆகத்  தேர்ந்தெடுக்கும்  வழக்கத்திலிருந்து  முதல்  முறையாக  ஒரு  இலத்தீன்  அமெரிக்கரான  பிரான்ஸிஸ்  தேர்ந்தெடுக்கப்பட்டர்.  ஒரு  இயேசு  சபையைச்  சேர்ந்த  துறவி  போப்  ஆகத்  தேர்ந்தெடுக்கப்பட்டதும்,  போப்கள்  வழக்கமாக  வைத்துக்  கொள்ளும்  பெயர்களில்  அல்லாமல்,  தன்  வாழ்நாள்  முழுவதும்  எளிமையை  நேசித்தவரும்  ஏழைமையை  சுவாசித்தவருமான  பிராஸிஸ்  அரசியாரின்  பெயரை  வைத்துக்கொண்டதும்  இவரின்  சிறப்பு.
      இவர்  பேராயராகப்  பதவி  ஏற்ற  பின்னரும்  ஆயர்கள்  வாழும்  ஆடம்பர  பங்களாக்களில்  தங்க  மறுத்து  அடுக்கு  மாடியில்  தங்கி  உதவிக்கு  ஒரு  வயதான  துறவியை  மட்டும்  வைத்துக்கொண்டு  தானே  சமைத்து  உண்டார்.  ஆடம்பர  மகிழுந்துகளில்  பயணிப்பதைத்  தவிர்த்து  மக்கள்  போகும்  பேருந்துகளிலும்,  இருசக்கர  வாகங்களிலும்  பயணம்  செய்து  அனைவரையும்  ஆச்சரியத்தில்  ஆழ்த்தினார்.  போப்  ஆன  பின்னரும்  அரண்மனை  போன்ற  வசதிகளைத்  தவிர்த்து  தான்  முன்னால்  தங்கிய  பழைய  விடுதி  அறையிலேயே  தங்கினார்.
     வழக்கமான  போப்கள்  அணியும்  ஆடம்பர  அங்கி,  சிவப்புக்  காலணி,  சிவப்புத்  தொப்பியைத்  தவிர்த்து  எளிய  அங்கியும்  வெள்ளை  நிற  தொப்பியையும்  அணிந்துகொண்டார்.எல்லாவற்றுக்கும்  மேலாக  வத்திக்கான்  வங்கியைத்  தணிக்கைக்கு  உட்படுத்தி  ஆடம்பரச்  செலவுசெய்யும்  ஆயர்களைத்  தட்டிக்கேட்டார்.  இந்தச்  செயல்பாட்டால்  மக்கள்  உள்ளங்கவர்ந்த  போப்  ஆக  பிரான்ஸிஸ்  இருக்கிறார்.
-- மி.அந்தோணிதாஸ்,  முடிச்சூர்.  ( வாசகர்  வாய்ஸ் )  அனுபவம்  புதுமை.
-- கல்கி.  11, ஜனவரி  2015.
--  இதழ்  உதவி :  செல்லூர் கண்ணன்.     

No comments: