Monday, February 20, 2017

மெட்ராஸ் ஐ !

மெட்ராஸ் ஐ  தானாகவே  குணமாகிவிடும்!
     மெட்ராஸ் ஐ !  மருத்துவ  ரீதியில், கொஞ்சம்  சுருக்கமாக  கண்  அழற்சி.
     கோடை  முடிந்து  மழை  சீசன்  தொடங்கியவுடன் 'மெட்ராஸ் ஐ'  ஆட்டம்  ஆரம்பமாகிவிடும்.
     அதற்கு  'அடினோ  வைரஸ்'  என்கிற  நுண்ணியிரிதான்  அடிப்படைக்  காரணம்.
     1970களில்  நடந்த  வங்கதேசப்  போரின்  போது  அந்நாட்டு  வீரர்களுக்கு  ஏற்பட்ட  இந்த  பாதிப்பு  சென்னை  உட்பட  பல்வேறு  இந்திய  நகரங்களுக்குப்  பரவியது.  திடீரென  கண்களில்  உண்டான  இந்தப்  புதிய  வகை  நோய்க்கு  என்ன  பெயர்  என்று  தெரியாததால்  காலப்போக்கில்  'மெட்ராஸ் ஐ (  சென்னை  கண் )  என்றே  அழைக்கப்பட்டதாகச்  சொல்கிறது  வரலாற்றுச்  சான்று.
    மெட்ராஸ் ஐ  வயது  வித்தியாசமில்லாமல்  அனைவரையும்  படுத்தி  எடுப்பது  சோகத்தின்  உச்சம்.  உடனே  கண்  சிவந்துவிடும்.  வலி  இருக்கும்.  இரவில்  படுக்கப்  போனவர்  காலையில்  எழும்போது  கண்களின்  ஓரத்தில்  வெள்ளைத்  திரவம்  போல்  திரண்டு  நிற்கும்.  கண்களைத்  திறக்க  முடியாமல்  சிரமப்படுவார்.
     தொடர்ந்து  அன்றாட  வாழ்க்கையில்  ஒருவித  அசதியை  ஏற்படுத்தும்  இந்த  பாதிப்பு.  பொதுவாக  'மெட்ராஸ் ஐ   வருவது  வாடிக்கை.  இரண்டு  நிலைகளில்  இந்நோய்க்கான  அறிகுறிகள்  தோன்றும்.  முதல்  வகையில்  கண்  சிவக்கும்.  வெளிச்சத்தைப்  பார்த்தால்  கண்  கூசும்.  பார்வை  மங்கும்.  கண்ணை  மட்டுமல்லாமல்  உடலின்  மற்ற  உறுப்புகளில்  உண்டாகும்  பாதிப்புகளை  வைத்தும்  அறிகுறியைக்  கண்டுபிடிக்கலாம்.  அதன்படி , தொண்டை  கரகரப்பாக  இருக்கும்.  கழுத்தில்  நெரி  கட்டும்.  சிலருக்கு  தொண்டையில்  புண்  வரும்.  இமைகளில்  வீக்கம்  உண்டாகி  கண்ணைத்  திறக்க  குடியாமல்  போகலாம்.
     இரண்டாவது  வகையில்  வைரஸுடன்  பாக்டீரியா  நுண்கிருமியும்  சேர்ந்து  கொள்ளும்.  நோய்  எதிர்ப்பு  சக்தி  குறைவாக  இருப்பவர்களுக்கு  இந்த  வகை  ஆபத்து  அதிகம்.  கண்களில்  இருக்கும்  ரத்த  நாளங்களில்  பாதிப்பு  உண்டாவது  தவிர்க்க  முடியாது.
-- எஸ்.அன்வர்.
-- குமுதம்  வார இதழ்.  5-11-2014.
-- இதழ் உதவி :  P. சம்பத் ஐயர்.  திருநள்ளாறு.    

No comments: