Saturday, August 20, 2016

வாசுகி தவம் செய்த இடம்

  தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைய மந்திர மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பை கயிறாகவும் பயன்படுத்தினார்கள்.  வலி பொறுக்க முடியாத வாசுகி நஞ்சைக் கக்கியது.  நஞ்சைக் கண்டு அஞ்சிய ட்தேவரும் அசுரரும் சிவபெருமானை வேண்டினர்.  சிவபெருமானும் அந்த நஞ்சை எடுத்து உண்டார்.
     அமுதம் கிடைக்காத கோபத்தில் அசுரர்கள் வாசுகியைச் சுருட்டி பந்துபோல் எறிந்தனர்.  அது கடற்கரையில் அமைந்திருந்த ஒரு மூங்கில் காட்டில் விழுந்தது.  உடல் நைந்து உயிர் போகும் நிலையில் இருந்த அப்பாம்பின் வாயிலிலிருந்து உயிர் தலைக்கேறிப் பிழைத்துக்கொண்டது.  சிவன் தனது நஞ்சை உண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டதே என்று மனம் வருந்திய வாசுகி, சிவனிடம் மன்னிப்பு வேண்டித் தவம் இருந்தது.  சிவனும் அதன் தவத்திற்கு இரங்கிக் காட்சி தந்தார்.
     வாசுகி தன் பாவத்தைப் பொறுத்தருளியதற்கு சிவனிடம் நன்றி கூறியது.  தான் தவம் செய்த மூங்கில் காட்டிலேயே கோயில் கொண்டு வழிபட வருவோரின் கேது கிரகத் தொல்லைகளை நிவர்த்தி செய்யுமாறு வேண்டியது.  வாசுகி வழிபட்ட இந்த இடம் மூங்கில் தோப்பு என்று அழைக்கப்படுகிறது.  இதற்கு அருகில் உள்ள கேது பரிகாரத் தலம்தான் நாகை மாவட்டத்தில் உள்ள கீழப்பெரும்பள்ளம்.  இங்கு செல்பவர்கள் மூங்கில் தோப்பையும் தரிசனம் செய்தால் நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
-- ஸ்ரீமதி.  பரிகாரத் தலம்.  ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், ஜூலை 24, 2014.  

No comments: