Wednesday, June 8, 2016

மின்னல் தாக்குதல்.

  வழக்கமாக நிற்கிற, நடக்கிற மனிதனை மின்சாரம் தாக்குகிறபோது, தோள்பட்டை வழியாக மின்சாரம் பாய்ந்து ஒரு நொடிக்குள் இதயத்தை நிறுத்திவிட்டு கால், பாதம் வழியாக மண்ணுக்குள் ஊடுருவி விடும்.  மின்சாரம் அல்லது மின்னல் தாக்கி இறந்தவர்கள் அத்தனை பேரின் உடலிலும் இன்லெட், அவுட் லெட்  துவாரங்கள் ஏற்பட்டிருக்கும்.  குறைந்த பட்சம் உடலில் உள்ள ரோமங்களாவது கருகியிருக்கும்.
     மின்னல் தாக்கினால், முதலில் இதயம்தான் செயல் இழக்கும் என்பதால் இதயத்தை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பிவிடுவார்கள்.
     கோடை மழை என்றாலே, இடியும் மின்னலும் இல்லாமல் பெய்யாது என்பார்கள்.  எளிதான வார்த்தையில் சொல்வதானால், மின்னல் என்பது மின்சாரம்தான்.  இது பெரும்பாலும் கோடை மழைக்காலங்களில்தான் ஏற்படும்.  காரணம், வெப்பம் அதிகமுள்ள காலங்களில்தான், வெப்பக் காற்றானது கருந்திரள் மேகங்களை உருவாக்கும்.  காற்று வீசும்போது, இந்த மேகத்துக்குள் இருக்கிற நீர்த்துகள்களும், பனிக்கட்டித் துகள்களும் உரசும்போது மேகத்துக்குள் எதிர்மின்சுமை அதிகமாகிவிடும்.
     நம் பூமியின் மேற்பரப்பில் நேர்மின்சுமை அதிகம் இருக்கும்.  எனவே, அந்த எதிர்மின்சுமைகள் பூமியால் ஈர்க்கப்படுகிறது.  பூமியை நோக்கி வேகமாக வரும் எதிர்மின்சுமை நேர்மின்சுமையை தொட்டவுடன், ( பூமியில் இறங்கியவுடன் ) மின்னல் ஏற்படுகிறது.  அந்த நேரத்தில் அளவுக்கு அதிகமான வெப்பம் உருவாவதால், ஏற்படுகிற வெடிப்பு சப்தமே இடி.  இடியும் மின்னலும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும்கூட , ஒலி,ஒளி இரண்டின் வேகமும் வெவ்வேறானவை என்பதால், மின்னலைப் பார்த்த பிறகுதான் நம்மால் இடியைக் கேட்க முடிகிறது.
--- கே.கே.மகேஷ்.     தேசம்.
-- 'தி இந்து' நாளிதழ், வெள்ளி, மே 2. 2014. 

No comments: