Friday, February 5, 2016

கீ - போர்டு

கீ - போர்டில் ஒளிந்திருக்கும் கிருமிகள்
     நாம் எப்போதெல்லாம் கை கழுவுகிறோம்?  சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும், கழிவறையைப் பயன்படுத்திய பிறகு, எனத் தேர்ந்தெடுத்த சில வேலைகளைச் செய்யும்போது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்து இப்படிச் செய்கிறோம்.
    அதேநேரம் கம்ப்யூட்டரையோ, செல்போனையோ பயன்படுத்திய பிறகு நாம் கைகளைக் கழுவுகிறோமா?  அதற்கும் சுத்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம்.  ஆனால், கழிபறையைவிட ஆறு மடங்கு அதிகமான கிருமிகள் நாம் தினசரிப் பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
     லண்டனில் ஒரு அலுவலகத்தில் இருந்த கீ போர்டுகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள்.  அதில் ஒரு கம்ப்யூட்டரில் அனுமதிக்கப்பட்ட பாக்டீரியா அளவைவிட 150 மடங்கு அதிகமான கிருமிகள் இருந்திருக்கின்றன.  பெரும்பாலான கீ போர்டுகள் பயன்பாட்டுக்குத் தகுதி இல்லாத அளவில் கிருமிகளின் கூடாரமாக இருந்திருக்கின்றன.  அவற்றின் கழிவறைக் கதவின் கைப்பிடியிலும், கழிவறை பேஸினிலும் காணப்படக்கூடிய ஈகோலி, கோலிபார்ம்ஸ், ஸ்டெஃபைலோகாக்கஸ் ஆரஸ், எண்டிரோ பாக்டீரியா போன்ற கிருமிகள் இருப்பதைப்பார்த்து ஆராய்ச்சியாளர்களே அதிர்ச்சியடைந்துவிட்டார்கள்.  வெளிநாடுகளில் இந்த நிலைமை என்றால், நம் அலுவலகத்திலோ வீடுகளிலோ பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
    குறிப்பிட்ட கால இடைவெளியில் கீ போர்டு, மவுஸ், செல்போன் ஆகியவற்றைச் சுத்தப்படுத்த வேண்டும்.  கீ போர்டைத் தலைகீழாகக் கவிழ்த்து மெதுவாகத் தட்டுவதன் மூலம் அதனுள்ளே சிக்கியிருக்கும் உனவுத் துணுக்குகளையோ, சிறிய குப்பைகளையோ அகற்றலாம்.  மெல்லிய துணியின் மூலமிவற்ரைத் துடைத்தெடுக்கலாம்.  இவை அனைத்தையும்விட ரொம்ப முக்கியம் கையைச் சுத்தம் செய்வது.  சுத்திகரிப்பானைப் பயன்படுத்திக் குறைந்தபட்சம் 30 விநாடிகள் தேய்த்துக் கழுவ வேண்டும்.
-- பிருந்தா.  சுத்தம் சுகாதாரம். நலம் வாழ.
--  'தி இந்து' நாளிதழ். செவ்வாய், பிப்ரவரி 25,2014. 

No comments: