Thursday, January 7, 2016

மேதாஜனனம் வேறுமுறைகள்.

  ஐந்திரீ  எனப்படும்  பேய்க்கும்மட்டி  வேர்,  ப்ராஹ்மீ  எனப்படும்  ப்ரம்மி  வழுக்கையின்  இலை,  சங்கபுஷ்பீ  என்ற  மூலிகையின்  வேர்,  வசம்பு  இந்த  நான்கையும்  தனித்தனியே  கடுகளவு  அரைத்து  இந்த  விழுதையும்  10  துளி  பசுநெய்  5  துளி  தேனையும்  சுய   தங்கத்தினால்  செய்த  ஓர்  அரசிலையில்  வைத்து  தேய்த்து  தர்ப்பத்தினால்  தோய்த்து  புத்தியினுடைய  வளர்ச்சிக்காக  குழந்தைக்கு  சிறிது  சிறிதாக  ஊட்டவேண்டும்.
     ஒரு  வசம்பு  துண்டைச்  சில  மணிநேரம்  பசுவின்  பாலில்  ஊற  வைத்தால்  மிருதுவாகும்.  இதில்  ஒரு  தங்கக்  கம்பியின்  ஊசி  போன்ற  நுனியால்  சொருகி  வசம்பின்  மத்தியில்  அடித்துச்  சொருகி  வைத்துக்  கொள்ளவும்.  மாத்திரை  மருந்து  அரைப்பதற்காக  உள்ள  ஒரு  சிறு  குழவியுடன்  கூடிய  வழுவழுப்பான  அம்மியில்  சில  துளிகள்  முலைப்பால்  வைத்து                 அதில்  தங்கக்  கம்பியும், வசம்பும்  அரைபடும்படியாக  உரைத்துக்  கலக்கி  அப்பாலை  குழந்தைக்கு  கொடுக்கவும்.  வசம்பு, தங்கக்கம்பி  உரைத்து  பிறந்தநாள்  வரும்வரையில்  தினசரி  கொடுக்கும்  பழக்கம்  கேரளத்தில்  பழைய  இல்லங்களில்  இன்றும்  இருக்கிறது.
     தங்கக்  குச்சியை  வசம்புத்  துண்டில்  அடித்து  வைத்துக்  கொண்டு, வசம்பையும்  தங்கத்தையும்  உரைத்துக்  கொடுக்கும்  முறையில்  சில  இடஞ்சல்கள்  ஏற்படுகின்றன.  வசம்பிலிருந்து  தங்கக்கம்பி  அடிக்கடி  நழுவி  விடுகிறது.  அரைப்பில்  வசம்பு  விழுதின்  அளவு  கண்டுபிடித்தல்  சிரமமாயிருக்கிறது.  வசம்பின்  அளவு  அதிகமானால்  குழந்தைக்கு  உமட்டல்  வாந்தி  ஏற்படும்.  அதனால்  கவனம்  தேவை.  இதைவிட  நல்ல  முறையானது  சுமார்  12  கிராம்  வசம்பை  துண்டுகளாக  நறுக்கி  ஆறு  மணிநேரம்  பசும்பாலில்  ஊறவைத்து  வெந்நீரால்  கழுவி  வெயிலில்  உலர்த்தி  நன்றாகப்  பொடி  செய்து  துணியால்  சலித்து  கண்ணாடி  பாட்டிலில்  பத்திரப்படுத்தி  வைத்துக்கொள்ளவும்.  தங்கத்தினால்  செய்த  சிறுபாலாடையில்  நெய்,  தேன்,  முலைப்பால்  இவற்றைச்  சில  துளிகள்  சேர்த்து  அதில்  மேற்படி  வசம்பு  சூரணம்  சிறுபயறு  அளவு  சேர்த்து  குழவியினால்  3  நிமிடங்கள்  நன்றாய்த்  தேய்க்கவும்.  அதைக்  குழந்தைக்கு  ஊட்டவும்.  இவ்விதம்  தொடர்ந்து  ஒரு  வருட  காலம்  தினசரி  செய்ய  வேண்டும்.  வசம்பு  சூர்ணத்தின்  அளவை  மாதத்திற்கு  3  கடுகளவு  வீதம்  கூட்டலாம்.  இதற்கு    உபயோகிக்கும்  தங்கப்  பாலடை  அல்லது  கிண்ணம்  அதிக  வழுவழுப்பாக  இருக்கும்படி  தேய்த்துப்  பாலீஷ்  போட்டிருக்கக்கூடாது.  கொஞ்சம்  சொரசொரப்பாக  இருப்பின்  தங்கம்  சேர்ந்து  மருந்துடன்  இழைபடுவதற்கு  எளிதாக  இருக்கும்.
     மேற்குறிப்பிட்ட  மூலிகைகளுடைய  சிறப்பான  மருத்துவ  குணங்களால்  குழந்தைக்கு  அறிவுத்திறன்  மேன்மையாக  வளரும்  என்று  கண்டுபிடித்தது  ஆயுர்வேதத்திற்கே  உரிய  தனிப்பெருமை.
-- எஸ்.சுவாமிநாதன்.  டீன்.  ஸ்ரீஜயேந்திர  சரஸ்வதி  ஆயுர்வேதக்  கல்லூரி.  நசரத்பேட்டை-( பூந்தமல்லி  அருகே)
--  தினமணி கதிர்.  17-5-2015.
-- இதழ்  உதவி :  செல்லூர் கண்ணன். 

No comments: