Monday, January 4, 2016

'சாணக்கிய நீதி'

"ந  பஸ்யதி  ச  ஜன்ம  அந்த:
 காம  அந்தோ  ந  ஏவ  பஸ்யதி!
 ந  பஸ்யதி  மத  உன்மத்த:
 ஸ்வார்த்தி  தோஷான்  ந  பஸ்யதி!!"
     இதில்  முதல்  வரியின்  விளக்கம் :  பிறவியிலேயே  பார்வையற்றவர்களுடைய  கண்கள்  மற்றவர்களை  நேருக்கு  நேர்  பார்க்க  முடியாது.  அதனால்,  இவர்கள்  மற்றவர்கள்  மேல்  தவறான  எண்ணம்  அல்லது  தப்பெண்ணம்  கொள்வதில்லை.
     அடுத்த  வரியின்  விளக்கம் :  கண்  பார்வை  இருந்தும்,  பார்வையற்றவர்கள்  நம்மிடையே  இருக்கிறார்கள்.  "கொக்குக்கு  ஒன்றே  மதி"  என்று  சொல்லுவார்களே... அதைப்போல  அதிகமான  ஆசைகளை  வளர்த்து  வைத்துக்கொண்டிருப்பவர்கள்  தன்னுடைய  ஆசைகளை  எப்படி  அடைவது  என்று  மட்டும்  பார்க்க  தெரிந்தவர்கள்.  மற்ற  விஷயங்கள்  அவர்கள்  கண்ணுக்குத்  தெரியாது.
     மூன்றாவது  வரியின்  விளக்கம் :  கர்வம்,  இறுமாப்பு,  அகங்காரம்,  செருக்கு,  தற்பெருமையில்  மயங்கி  தத்தளிக்கும்  மனிதர்கள்  தன்னை  மீறி  எவரையும்  பார்க்க  மறுப்பவர்கள்.
     கடைசி  வரிக்கு  விளக்கம் :  மிகவும்  மோசமான  நிலையில்  இருக்கும்  கண்ணுள்ள  குருடர்களும்  நம்மிடையே  இருக்கிறார்கள்.  அவர்கள்  பிறர்  நலம்  கருதாதவர்கள்;  தன்னலத்தால்  தூண்டப்பட்ட  சுயநலவாதிகள்.  தன்னை  மீறி  மற்றவர்கள்  இருப்பதையே  மறந்து  விடுபவர்கள்.
     கண்  பார்வை  இல்லாததால்  பார்க்க  முடியாதவர்கள்      நம்மிடையே  இருக்கிறார்கள்.  அதுபோல,  பார்வை  இருந்தும்  போலி  வாழ்வு  வாழ்பவர்களும்  நம்மிடையே  இருக்கிறார்கள்.  இதற்கு  நிவாரணம்  இருக்கிறதா?
     இருக்கிறது... கண்களை  திறந்து  பார்த்து,  நன்கு  யோசிக்க  வேண்டிய  விஷயம்  இது.  நாம்  எல்லோரும்  இதயக்கண்  மூலம்  மற்ற  ஜீவராசிகளை  நோக்க  வேண்டும்.  அவ்வாறு  செய்தால்,  ஊனக்கண்  மட்டுமல்ல!  ஞானக்கண்ணும்  இருக்கிறது  என்று  பெருமைப்பட்டுக்  கொள்ளலாம்.
-- சித்ரா  நாராயணன்.  ( நல்ல  வார்த்தை  நாலஞ்சு! )  தொடரில்...
-- தினமலர்.  ஆன்மிக மலர்.  இணைப்பு. சென்னை  பதிப்பு . நவம்பர்  18, 2014.
-- இதழ்  உதவி :  SB. மாதவன்,  விருகம்பாக்கம்.  சென்னை . 92.

No comments: