Sunday, January 31, 2016

மதுரகவி ஆழ்வார்

மதுரகவி ஆழ்வார் அளப்பரிய ஆச்சாரிய பக்தி
      வைணவ சம்பிரதாயத்தில் ஆச்சார்யனுக்கே முதலிடம்.  அப்படி ஆச்சார்யனான நம்மாழ்வாரைப் போற்றித் துதித்தவர் மதுரகவி ஆழ்வார்.  தூணிலும் துரும்பிலும் வியாபித்திருந்த பெருமாளை 'உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே' என்று துதித்திருந்தவர் நம்மாழ்வார்.  நம்மாழ்வாருக்குக் கண்ணன் உயிர் தெய்வம் என்றால், மதுரகவி ஆழ்வாருக்கோ நம்மாழ்வாரே உயிர்.
     மதுரகவி ஆழ்வார் கருடனின் அவதாரம் என்று கொண்டாடப்படுகிறார்.  இவர் திருக்கோலூர் என்னும் திவ்ய தேசத்தில் அவதரித்தார்.  இவர் குல வழக்கப்படி வேதங்களைக் கற்றுத் தேர்ந்தார்.  வேதம் தமிழில் செய்த மாறன் என்ற பெருமை பெற்ற நம்மாழ்வாரின் சீடரான இவர், தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் மிக்க புலமை படைத்தவராக இருந்தார்.
     முன்னதாக வட இந்தியப் பயணம் மேற்கொண்டு அயோத்தியில் ராமபிரானைத் தரிசித்தார்.  பின்னர் தென்திசை நோக்கி வரும்போது ஒரு புதிய ஜோதியைக் கண்டார்.  அந்த ஜோதி எங்கிருந்து வருகிறது என்பதை அறிவதற்காக அவ்வோளியை நோக்கி வந்தார்.  அப்போது திருவேங்கடம், திருவரங்கம், திருமாலிருஞ்சோலை,திருவில்லிப்புத்தூர் ஆகிய திவ்ய தேசங்களைத் தரிசித்தார்.  அந்த தெய்வீகப் பயணத்தின் முடிவில் திருகுருகூர் என்ற புண்ணியத் தலத்தை அடைந்தார்.
     அந்த ஒளியின் இருப்பிடமே நம்மாழ்வார் வசிக்கும் இடம் என்பதைக் கண்டார் என்றும், அவரையே குருவாகக் கொண்டார் என்பதும் வைணவ மரபு சார்ந்த நம்பிக்கை.
     இவர் 11 திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை இயற்றியுள்ளார்.  இப்பாசுரங்கள் அனைத்தும் நம்மாழ்வார் மேல் மதுரகவி ஆழ்வார் கொண்ட பக்தியைத் தெரிவிக்கின்றன.  ஆச்சாரியனைக் கொண்டாடும் விதமாக நம்மாழ்வாரை அர்ச்சா ரூபமாக எழுந்தருளச் செய்தார்.  அவர் அருளிய திவ்ய பிரபந்தங்களை நாம சங்கீர்த்தனமாக உலகோருக்குக் கற்றுக் கொடுத்தார்.
-- ராஜேஸ்வரி ஐயர்.  ஆனந்த ஜோதி.
--  'தி இந்து' நாளிதழ். வியாழன், மார்ச் 20,2014.  

No comments: