Friday, October 9, 2015

விவாதி ராகங்கள்.

 .' விவாதி ராகம் என்றால் என்ன?'
      எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், ' ஆள் மாறாட்டம் ' போல ' ஸ்வர மாறாட்டம் '.  கர்னாடக சங்கீதத்தில் உள்ல ஏழு ஸ்வரங்களில் 'ஸ', 'ப'  தவிர இதர ஐந்து ஸ்வரங்கள் ஒவ்வொன்றும் 'மேல்' என்றும் 'கீழ்' என்றும் பகுக்கப்படுகின்றன. இதில்,ஒரே  ஸ்வரத்தில் மேல் மற்றும் கீழ் பிரிவுகள் ஒரே ராகத்தில் அமைந்தால் அவற்றைப் பாடுவது கடினம்.  உதாரணமாக, 'மேல் க', 'கீழ் க'  ( அதாவது, காந்தாரம்) ஆகிய இரண்டும் ஒரே ராகத்தில் இடம் பெற்றால், 'க',  'க' வென்று பாடுவது சற்று குழப்பமாகத் தோன்றும்.  அப்படிப்பட்ட ராகங்களில் கீழ் 'க' வின் பெயரை 'ரீ' என்று மாற்றி அமைக்கிறது சங்கீத சாஸ்திரம்.  இந்த மூன்றாவது 'ரீ' ( சதுஸ்ருதி ரிஷபம் ) ஒரு விவாதி ஸ்வரம்.  இப்படி நான்கு விவாதி ஸ்வரங்கள் உள்ளன.  விவாதி ஸ்வரங்கள் இடம்பெறும் ராகங்கள் விவாதி ராகங்கள்.  இந்த விவாதி ஸ்வரத்திற்கும் அதற்கடுத்த ஸ்வரத்திற்கும் நடுவே உள்ள இடைவெளி மிகக் குறைவாக இருப்பதுதான் சங்கீதக்காரர்களுக்குத் தலைவலி.
      கர்னாடக சங்கீதத்தின் 72 மேளகர்த்தா ( அல்லது 'தாய்' ) ராகங்களில் 40 விவாதி மேளங்கள்.  இவற்றிலிருந்து பிறக்கும் நூற்றுக்கணக்கான ஜன்ய ராகங்களும் விவாதி ராகங்கள்.  இந்த விவாதி ராகங்களைப் பாடக் கூடாது.  பாடுவது மங்களகரம் அல்ல, விவாதி தோஷம் வந்து சேரும் என்பது ஒரு சிலரின் கருத்து.  அந்தக் காலத்தைச் சேர்ந்த பெரும்பாலானோரிடம் அப்படிப்பட்ட கருத்து பரவியிருந்தது.  தியாகராஜா சுவாமிகள்கூட ஐந்து பஞ்ச ரத்ன கீர்த்தனங்களில் இரண்டு ( நாட்டை, வராளி ) விவாதி ராகங்களைப் பயன்படுத்தியிருக்கிறாரே, என்பது எதிர்க் கருத்து.
      இக்காலத்திலும் சிலர் ' அமங்கலம்', 'தோஷம்' என்றெல்லாம் நினைக்காவிட்டாலும், விவாதி ராகங்கள் விஸ்தாரமாகப் பாட இடம் தராதவை.  அவற்றில் 'உயிர்' இல்லை என்று பல சங்கீத வித்தகர்கள் கருதுவதுண்டு.
     பிரபல சங்கீத மேதை ஜேசுதாஸ் ' விவாதி வேண்டும்' என்கிற கட்சியைச் சேர்ந்தவர்.  முதல் மேளகர்த்தாவான கனகாங்கி என்ற விவாதி ராகம் கைக்குள் வர வேண்டும் என்று நான்கு ஆண்டுகள் பயிற்சி செய்தேன் என்று அடிக்கடி சொல்லுவார்.  இம்முறை சென்னை கல்சுரல் அகாடமியில் 36ஆம் மேளகர்த்தாவான சலநாட்டை ராகத்தை, அதன் லட்சணங்களை விளக்கி, பாடி, பிய்த்து உதறிவிட்டார்.  ஆலாபனை, கல்பனா ஸ்வரங்களைப் பாடி தூள் கிளப்பிவிட்டார்.
-- ம.ரமேஷ்.   இசை நாட்டியம் நாடகம்.
-- ' தி இந்து' நாளிதழ். வெள்ளி, ஜனவரி 3,2014. 

No comments: