Sunday, September 27, 2015

கோபம்

ஆண் கோபம், பெண் கோபம் : எது அதிகம்?
     சமூகக் கட்டமைப்பில் ஆணும் பெண்ணும் சமம்.  ஆனால், உடலியல் தொடங்கி உளவியல் வரை இருவருக்குமான இடைவெளி அதிகம்.  அதனால்தான் ஆண் கோபம் வேறு, பெண் கோபம் வேறு என்கிறோம்.  பெரும்பான்மை ஆணின் கோபம் மூர்க்கக் கோபம்.  முன்பின் யோசிக்காத கோபம்.  சமயங்களில் வக்கிரம் கொப்பளிக்கும் கோபம்.
     ஆண் கோபத்துக்கு கொஞ்சமும் வீரியம் குறைந்தது அல்ல பெரும்பான்மை பெண் கோபம்.  ஆனால், அதனை வெளிப்படுத்துவதில் இருக்கிறது வேறுபாடு.  பெண் கோபம், விளைவுகளை யோசிக்கும்.  ஆண் அளவுக்கு அழிக்கத் துணியாது.  கொஞ்சமேனும் கருணை காட்டும்.
     இந்த வேறுபாடுகளை அடையாளம் காணும் மருத்துவ அறிவியல் அதற்குக் காரணமும் சொல்கிறது.  சரிசமமாக உடைத்த அரை வட்டத் தேங்காய் வடிவத்தில் இரு பாகங்களாக இருக்கிறது நமது மூளை.  இதன் பெயர் செரிபிரல் ஹெமிஸ்பியர்
( Cerebral  hemisphere ).  இந்த இரு அரை வட்டப் பகுதிகளையும் இணைக்கும் நார்ப் பொருளிலான சுவர்தான் கார்பஸ் கலோசம் ( Corpus callosum).  வலது அரை வட்ட மூளைக்கும் இடது அரை வட்ட மூளைக்கும் தகவல் தொடர்புகளை கொண்டுசெல்வது இந்த கார்பஸ் கலோசம்தான்.  தகவல் தொடர்பில் தபால்காரருக்கு உதவுவதற்காக சுமார் 250 மில்லியன் நரம்பு முனைகள் ( Axons ) பரிமாற்றப் பணிகளில் அதிவேகத்தில் ஈடுபடுகின்றன.
      வலது மூளையை எமோஷனல் பிரைன் ( Emotional brain ) என்றும் இடது மூளையை லாஜிக்கல் பிரைன் ( Logical brain ) என்றும் சொல்கிறது மூளை நரம்பியல்.  வலது மூளை உணர்ச்சிகரமானது.  வேகமானது.  உடனடியாகச் செயல்பட உறுப்புகளுக்குக் கட்டளையிடக்கூடியது.
     இடது மூளையோ யோசிக்கும் தன்மை கொண்டது.  நாகரிகம், சிந்தனைகள், பகுத்தாய்வு, பன்திறன்கள், கூச்சம், கண்னியம், நட்பு, காதல், தாய்மை உள்ளிட்ட உணர்வுகள் எல்லாம் ஊற்றெடுப்பது இடது மூளையில்தான்.  விலங்கிடம் இருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டும் ஆறாம் அறிவு இதுதான்.
     வேகமும் விவேகமும் சேர்ந்து இயங்கும்போதுதான் ஒரு மனிதனின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும்.  அதற்கு இரு அரை வட்ட மூளைகளுக்கான தபால்காரரும் மேலாளருமான கார்பஸ் கலோசம் ஆரோக்கியமானவராக இருத்தல் அவசியம்.  இவர்தான் இடது மூளை சிந்தித்து உருவாக்கும் கருத்தை வலது மூளைக்கு எடுத்துச் செல்கிறார்.  அங்கு சிற்சில காய் நகர்தலுக்குப் பிறகு அக்கருத்து, செயலாக்கம் பெறுகிறது.  இவைகள் எல்லாம் நமது கற்பனைக்கு எட்டாத வேகத்தில் நடக்கக்கூடியவை.  ஆனால், தபால்காரர் ஆரோக்கியம் இழந்தால், சரியாகச் செயல்படத் தவறினால், தகவல் தொடர்பில், ஆலோசனை பெறுவதில் குளறுபடி நடக்கிறது.  250 மில்லியன் நரம்பு முனைகளும் ஒரே நேரத்தில் தாறுமாறாக இயங்குகின்றன.  யோசிக்கவே இயலாமல் ஸ்தம்பிக்கிறது மூளை.  கோபம் கண்ணை மறைத்துவிட்டது என்று சொல்வோமே அது இதுதான்.
     இயல்பிலேயே ஆண் மூளையின் கார்பஸ் கலோசம் என்கிற நார்ச் சுவரின் தடிமன் மிகக் குறைவு.  மென்மையானது.  ஆனால், பெண் மூளையின் கார்பஸ் கலோசம், ஆண் மூளையில் இருப்பதைவிட இருமடங்கு தடிமன் அதிகமானது.  உறுதியானதும்கூட.  இதனால்தான் இயல்பிலேயே பெண் மூளை, ஆண் மூளையைவிட யோசித்துக் கோபப்படுகிறது.  புத்திசாலித்தனமாகக் கோபப்படுகிறது. அழகாகக் கோபப்படுகிறது.
-- டி.எஸ்.சஞ்சீவிகுமார்.  டாக்டர் மோகன் வெங்கடாசலபதி. ( உணர்ச்சிகள் ). வாழ்வு இனிது. ரசித்து வாழ வேண்டும்.
-- ' தி இந்து ' நாளிதழ். சனி, டிசம்பர் 21, 2013.  

No comments: