Thursday, August 20, 2015

சுட்டது நெட்டளவு.

  "புத்தம் புது நவீன கார் விற்பனைக்கு.  விலை ரூ.10,000 " என்ற விளம்பரம் பத்திரிகைகளில் வந்திருந்தது.
     வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட காரை விற்கமாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை.
     ஒருவர் மட்டும் " வந்தால் மலை " என்ற முடியோடு அணுகினார்.  விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஓட்டிப் பார்க்கச் சொன்னாள்.  ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது.
     வெறும் 500 கி.மீ., மட்டுமே இதுவரை ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது.  பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம், கார் முதலியவற்றைப் பெற்றுக்கொண்டு கிளம்பும்போது ஆர்வ மிகுதியால் வாங்கியவர் கேட்டார்.
    " அம்மணி, இவ்வளவு விலை உயர்ந்த காரை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா...? "
      அவள் ஒன்றும் பேசாமல் ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினாள்.  அது அவள் கணவர், வேலைக்காரியுடன் வீட்டைவிட்டு எங்கோ ஓடும்போது எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதம்.
     " அன்பே என்னை மன்னித்துக் கொள்.  இவ்வளவு நாள் என்னுடன் நீ வாழ்ந்தமைக்கு நம் வீட்டை நீ எடுத்துக் கொள்.  நானும் முனியம்மாவும் புது வாழ்க்கையை துவக்க 7 லட்சம் பெறுமானமுள்ள நம் புதுக் காரை உடனடியாக என்ன விலைக்காவது விற்றுவிடு.  பணத்தை என் அக்கவுண்டில் போட்டுவிடு."
-- பகிர்ந்து கொண்டவர் : டி.எஸ்.உமாராணி.  ரிலாக்ஸ்.
-- ' தி இந்து ' நாளிதழ். திங்கள், டிசம்பர் 16, 2013. 

No comments: