Friday, April 10, 2015

உயிர் எங்கே?

  ' நம்  உயிர்  எங்கே  இருக்கிறது ?'  என்று  ஓர்  ஆராய்ச்சி,  மருத்துவர்கள்  கூடி  ஆய்வு  செய்கிறார்கள்.  ஒரு  மருத்துவர்,  ' நம்  உயிர்  இதயத்  துடிப்பில்  இருக்கிறது.  இதயத்  துடிப்பில்  இருக்கிறது.  இதயத்  துடிப்பு  நின்று  போனால்  உயிர்  பிரிந்து  போகும்'  என்றார்.  இன்னொரு  மருத்துவர், ' நம்  உயிர்  சுவாசக்  காற்றில்  இருக்கிறது.  சுவாசிக்க  மறந்து  போனால்  உயிர்  பறந்து  போகும் ' என்றார்.  மற்றுமொரு  மருத்துவரோ,  ' நம்  உயிர்  ரத்த  ஓட்டத்தில்  இருக்கிறது.  ரத்த  ஓட்டம்  தடைபட்டால்... உயிர்  விடைபெறும்'  என்றார்.  ஆளுக்கு  ஆள்  உயிர்  இருக்கின்ற  இடம்  பற்றிய  கருத்து  வேறுபாடுகள்  உண்டு.
      உலகின்  தலைசிறந்த  உளவியல்  மருத்துவர்,  வான்புகழ்  வள்ளுவர்  சொல்கிறார்...' நம்  உயிர்,  அன்பில்  இருக்கிறது.  அன்பின்  வழியது  உயிர்  நிலை'  என்று  அறிவிக்கிறார்.  அந்த  அன்புதான்  அவனியெங்கும்  ஆட்கொள்ளப்பட  வேண்டும்.
      நமது  வாழ்க்கையின்  ஆதாரமே  அன்புதான்.  இன்றைக்கு  கிலோ  என்ன  விலை  எனக்  கேட்கும்  அளவுக்கு,  அன்பு  நீர்த்துப்  போய்  விட்டது.  எந்த  சமுதாயத்தில்  குழந்தைகளும்,  முதியோர்களும்  காப்பகங்களில்  பராமரிக்கப்படுகிறார்களோ... அந்த  சமுதாயத்தில்  அன்பின்  ஆணிவேர்  இற்றுப்  போய்விட்டது  என்று  பொருள். காப்பகத்தில்  இருக்கும்  ஒரு  தாய்,  தன்  அருமை  மகனுக்கு  உயிரை  உருக்கி  ஒரு  கடிதம்  எழுதுகிறாள்...
    ' மகனே,  நீ  குடியிருக்க
     என்  வயிற்றில்  இடம்  இருந்தது.
     நான்  குடியிருக்க
     ஒரு  அறைகூடவா  இல்லை
     உன்  வீட்டில்...?'
என்று  கேட்கின்ற  தாயின்  புலம்பல்,  அக்குடும்பத்தில்  அன்பின்  ஆழம்  நீர்த்துப்  போய்விட்டதைக்  காட்டுகிறது.
--  தவத்திரு  குன்றக்குடி  பொன்னம்பல  அடிகளார்.
--  அவள் விகடன்,  20 -11 - 2012.  தீபாவளி  ஸ்பெஷல்.
--  இதழ் உதவி: N.கிரி,  நியூஸ்  ஏஜென்ட் .  திருநள்ளாறு.  ( கொல்லுமாங்குடி ). 

No comments: