Saturday, August 2, 2014

ஆவாரை டீ!

' பால் சாப்பிடக் கூடாது;  இனிப்பு வேண்டாம்... வேறு என்னதான் சார் காலையில் குடிப்பது? ' என்று கேட்டோருக்கு என் பதில்,  ஆவாரை டீ.  நாம் மறந்துபோன அருமையான ஒரு பாரம்பரிய பானம்.  ' ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ?'  என்று முதுமொழி வழக்கத்தில் உண்டு.  ரோசாப்பூ, ஆர்க்கிட் பூ போல ஆவாரைக்கு மலர் மார்க்கெட்டில் மவுசு இல்லை என்றாலும்,  கூடிய சீக்கிரமே, அதன் சந்தைக்கு பெரும் அடிதடி வரப்போவது உறுதி.  ஆரம்பகட்ட சர்க்கரை நோய்க்கு இந்த மலர் தரும் மருத்துவம் பெரும் பலன் அளிப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
     ' ஆவாரை கொன்றை நாவல்
      அலைகடல் முத்துங் கோஷ்டம்
      மேவிய மருத் தோல் '  என ஏழு தாவரங்களைக் கொண்டு டீ போட்டு குடித்தால்,  ' காவிரி நீரும் வற்றும்; கடல் நீரும் வற்றும் என்று பரிபாஷையில் சித்தன் சொன்ன சூத்திரத்தை கட்டவிழ்த்துப் பார்ப்போமா?
      இனிப்பு நீரான ( காவிரி நீர் ) சர்க்கரை வியாதிக்கும்,  உப்பு நீரான ( கடல் நீர் )  சிறுநீரகக் கோளாறில் புரதம் கழிந்துவரும் நீருக்கும்.  இந்த ஆவாரை காபி ஓர் அருமருந்து என்பதே அந்தப் பரிபாடல் சொல்லும் உண்மை.
-- மருத்துவர் கு. சிவராமன்.  ( ஆறாம் திணை ).
-- ஆனந்த விகடன். 4 .9.2013.  

No comments: