Saturday, May 3, 2014

புதிய வகை காசோலைகள்

 ( சிறப்பு )
புதிய வகை காசோலைகள் ஜனவரி முதல் கட்டாயமாகிறது.
    வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய காசோலைகளைப் பயன்படுத்துவது ஜனவரி முதல் கட்டாயமாகிறது.  காசோலைகளை பணமாக மாற்றுவதில் தற்போது ஏற்பட்டு வரும் தாமதத்தைத் தவிர்க்க ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
     இத்திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அமலாவதில் தாமதம் ஏற்பட்டது.  வங்கிகளில் புதிய காசோலை முறையை 2013-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டிருந்தது.  அதன்படி, "சி.டி.எஸ்" என்ற இந்த திட்டத்தின் கீழ், அனைத்து வங்கிகளும் சி.டி.எஸ்.- 2010 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட காசோலைகலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  இவை "ஸ்கேன் செய்யப்பட்டு, ஆன்-லைன் வாயிலாகவே, மற்றொரு வங்கிக் கிளைக்கு அனுப்பி வைக்கப்படும்.  அதன் பிறகு, காசோலையில் குறிப்பிட்டுள்ளபடி வாடிக்கையாளருக்கு பணம் உடனடியாக வழங்கப்படும்.
     இந்த புதிய வகை காசோலைகளை, முழு அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டு, அனைத்து வங்கிகளும், வாடிக்கையாளர்களிடம் உள்ள பழைய காசோலைகளைத் திரும்பப் பெற்று வருகின்றன.
     வங்கிகள், சேமிப்புகணக்கு வாடிக்கையாளர்களுக்கு, முதன் முறையாக வழங்கும் புதிய வகை காசோலைகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.
     தற்போது, வங்கி வட்டாரத்தில், பழைய காசோலைகளின் புழக்கம் அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, புதிய காசோலைகளை நடைமுறைப்படுத்துவதற்கான காலக் கெடு, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.  2013-ல் ஜூலை மாதம், பின்னர் ஆகஸ்டு 1-ம் தேதி என காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டு இருந்தது.
     இந்நிலையில் தற்போது இந்த காலக்கெடுவை டிசம்பர் 31-ம் தேதிக்கு நீட்டித்து இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.  வரும் ஜனவரி முதல் பழைய காசோலைகளை வங்கிகள் ஏற்காது என்றும், சி.டி.எஸ்.- 2010  தொழில்நுட்ப வசதி கொண்ட காசோலைகளை மட்டுமே ஏற்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தகவல் அனுப்பியுள்ளது.
பழைய காசோலைகள் பணமாவதில் கூடுதல் தாமதம் :
     வாடிக்கையாளரின் பெயர் உள்பட கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சிடிஎஸ் காசோலைகளை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது.  எனினும், சிடிஎஸ் காசோலை பெறாமல் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.  அவர்களது பழைய காசோலைகளை வங்கிகள் தொடர்ந்து பெற்று வருகின்றன.  எனினும், அவற்றை பணமாக மாற்றுவதற்கான "கிளியரிங்" வசதி வாரத்துக்கு 3 முறை என்பதை மாற்றி ஜூன் முதல் 2 முறையாகவும், அக்டோபரில் இருந்து மாதம் ஒரு முறை என்றும் குறைக்கப்பட்டுள்ளது.  இதனால், காசோலைகளை பணமாக்குவதில் கூடுதல் தாமதம் ஏற்படக்கூடும்.  எனினும், டிசம்பருக்கு பிறகு, புதிய காசோலைகள் மட்டுமே பெறப்படும் என்பதால் அப்பிரச்சினை இருக்காது என வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.
-- வணிகம்.  Business Line பக்கம்.
-- 'தி இந்து' நாளிதழ்.  வெள்ளி,  மே 2, 2014.

No comments: