Tuesday, February 25, 2014

நினைவு நாள் !

பாட்டி திவசத்தன்று
அப்பாவுக்கு பிடித்த அரிசிப் பாயசம்
அண்ணனுக்குப் பிடித்த அவியல்
தங்கை கேட்டாள் என்று மோர்குழம்பு
தம்பி ஆசைப்பட்டானே என்று முறுக்கு
எனக்குப் பிடித்த எள்ளுருண்டை
தனக்குப் பிடித்த மாங்காய்பச்சடி
என்று அமர்க்களமாய்
விருந்து தயாரித்தாள் அம்மா
தான் விரும்பும்
பருப்பு வடையோ
பயத்தங்கஞ்சியோ
இருக்கிறதா என்று
இலையில்
துழாவிப் பார்த்து
ஏமாற்றத்துடன்
ஏங்கி கலங்கின
படத்திலிருந்த
பாட்டியின் கண்கள் !
-- இந்திரஜித். புள்ளமங்கலம்.
-- தினமலர். வாரமலர். ஆகஸ்ட் 28, 2011.  

No comments: