Monday, January 6, 2014

துறவு என்றால் என்ன?

 கங்கை நதியில் சீடர்களுடன் நீராடிக் கரையேறினார் குரு.  நித்ய கர்மங்கள் செய்யும் முன் நெற்றியில் அணிந்துகொள்ள சந்தனம் தேவைப்பட்டது.  குருஜி தன் சீடர்களைப் பார்த்து, யாராவது ஊருக்குள் போய் எந்த வீட்டிலாவது சிறிது சந்தனம் வாங்கிவாருங்கள் என்றார்.
     அவர் சீடர்களில் ஒருவன், " குருஜி, என்னிடம் சந்தனம் இருக்கிறது " என்றான்.
    " உன்னிடம் சந்தனம் எப்படி வந்தது? " என்று கேட்டார் குருஜி.
    " நான் நேற்று தங்கியிருந்தோமே அந்த வீட்டுக்காரர் கொடுத்தார்.  நெற்றிக்கு இட்டுக்கொண்டு மீதி இருந்ததை நாளைக்குத் தேவைப்படுமே என்று எடுத்துவைத்துக்கொண்டேன்."
      குருஜி புன்னகை புரிந்தார்.
    " நீ எப்போது துறவறத்தை விட்டு குடும்பஸ்தனானாய்?" என்று கேட்டார்.
      சீடனுக்கு அதிர்ச்சி,  குருஜி தொடர்ந்தார்.
    " ஒரு துறவி தனக்கென்று எதுவும் சேமித்துவைத்துக்கொள்ளக் கூடாது.  நாளைக்குத் தேவைப்படுமென்று சேமிதுவைத்துக்கொள்பவர் குடும்பஸ்தர்.  துறவி என்பவன் ஒவ்வொரு நாளும் தனக்குத் தேவையானதை யாசித்துப் பெற வேண்டும்." என்றார் குருஜி.
      சீடர் தலை கவிழ்ந்தார்.
-- குத்தாலம் ஆர். கோபாலகிருஷ்ணன்.  ஆனந்த ஜோதி.
--  ' தி இந்து ' நாளிதழ். வியாழன், டிசம்பர் 5, 2013.    

No comments: