Thursday, February 9, 2012

சிங்கப்பூரின் அதிசயம் !

உலகின் சுற்றுலா செல்லமாக இருக்கும் சிங்கப்பூரின் லேட்டஸ்டு கலர்ஃபுல் கவர்ச்சி ' மெரினா பே சண்ட்ஸ் ! '
மெரினா பே சாண்ட்ஸ் என்ற கட்டடம்... கட்டுமானக் கலையின் புதிய உச்சம் . 55 மாடிகள், 2,561 ஹோட்டல் அறைகள், உலகத்தின் அத்தனை வகை உணவுகளையும் பரிமாறும் 50 வித உணவகங்கள், எஸ்கலேட்டர்களில் பயணித்து மாடி மாடியாகச் சென்றாலும் விரிந்துகொண்டே இருக்கும் ஷாப்பிங் சென்டர்கள், எண்ணிக்கையில் அடங்காத சினிமா தியேட்டர்கள், கார்ப்பரேட் கம்பெனிகள் மாநாடு நடந்துகொண்டே இருக்கும் விழா மண்டபங்கள்.... இவை எல்லாம் போதாது என்று மூன்று கோபுரங்களின் உச்சிகளையும் இணைத்து அந்தரத்தில் அமைந்து இருக்கும் நீச்சல் குளம் ! உச்சியில் சுகந்த மணம் பரப்ப ஒரு தொங்கும் தோட்டம் . இத்தனை அழகையும் கண்டு ரசிக்க அவ்வப்போது மேகப் பஞ்சுப் பொதிக்ளே மெரினா பெ சண்ட்ஸின் மொட்டை மாடியில் தடம் பதித்துத் தவழ்கின்றன . இவ்வளவு செயற்கை அலங்காரங்களுக்கு மத்தியில் 250 மரங்கள் பச்சைப் பசேலெனத் தலையாட்டி இயற்கைக்கு மரியாதை செய்கின்றன .
' சுற்றுலாதான் தனது நாட்டின் சுவாசம் ! ' என்பதை உணர்ந்திருக்கும் சிங்கப்பூர் அரசு... நகரின் மையப் பகுதியில் இருக்கும் தனது பூமி, ஆறு, வானம் ஆகியவற்றை மெரினா பே நிர்வாகத்திடம் ஒப்படைத்து, ' உங்களால் எத்தனை லட்சம் சுற்றுலா பயணிகளைக் கொண்டுவர முடியும் ? ' என்று கேட்டது . பதிலாக, வார்த்தையில் எதுவும் ' கமிட் ' செய்துகொள்ளாமல் கிரகப்பிரவேசம் முடிந்த ஒன்பது மாத காலத்துக்குள் ஒரு கோடியே பத்து லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து அசத்தியது மெரினா பே .
மெரினா பே எதிரே இருக்கும் தடாகத்தின் மத்தியில் தாமரையின் வடிவில் விரிந்திருக்கும் அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவில் ஐந்து கண்டங்களில் இருந்து வந்திருந்த ஏழு சமையல்காரர்கள் நடத்திய ' சமையல் சுற்றுலா ' அதுவரை நம் நாக்கின் சுவை மொட்டுகள் உணராத சுவையை எல்லாம் உணரவைத்தது .
இரவு லெசர் ஷோ !
' நீர், ஒளி, ஒலி இவற்றைக்கொண்டு என்னவெல்லாம் வர்ண ஜாலம் காட்டலாம் என்று கற்பனைக்குச் சவால்விடும் நிகழ்ச்சி அது . கட்டடங்களின் உச்சி, ஆற்றின் ஆழத்தில் இருந்து... என்று நினைத்தே பார்க்க முடியாத இடங்களில் இருந்தெல்லாம் புறப்பட்ட ஒளிக்கற்றைகள் கண்ணுக்குத் தெரியாத நீர்த்திரைகளில் படர்ந்து பரவி சாகசம் செய்தன . வெற்றுவெளியில் சிறுமி சிரிக்கிறாள், நாய்க்குட்டி குரைக்கிறது, குபீரென நீச்சலுடையில் தாவி வரும் பெண் தடாகத்துக்குள் பாய்கிறாள்... பொழுதுபோக்கின் அதீத நீள அகலங்கள் ஆச்சர்யப்படுத்துகின்றன . தீப்பொறி இல்லாத வாணவேடிக்கை, வானத்தையே வெள்ளித்திரை ஆக்கிய கொண்டாட்டம் என சிங்கப்பூர்.... சிங்கப்பூர்தான் !
--- பி. ஆரோக்கியவேல் . ஆனந்த விகடன் , 9 . 3 .2011 .

No comments: