Saturday, September 24, 2011

எறும்புகளின் ராஜ்ஜியம் .

எறும்புகளின் ராஜ்ஜியத்தில் மனித அடிமைகள் ?
காலம், உலகம்.... என எல்லாமே சுழற்சி முறையில், அதாவது ஆரம்பித்த இடத்திலேயே வந்து முடியும் தன்மை கொண்டவை . ஆகவே, ஒரு கட்டத்தில் உலகின் மீது மனிதன் கொண்டிருக்கும் ஆதிக்கமும் முடிவுக்கு வந்துவிடும் என்பதுதான் நியதி . சரி, மனிதனுக்குப் பிறகு இந்த பூவுலகை யார் ஆள்வார்கள் என்று கற்பனை செய்து பார்த்தால்... கண்முன்னே சிரிக்கின்றன எறும்புகள் !
ஏன் கூடாது ? பூமிக்கு மேலேயும் சரி, அடியிலும் சரி... எல்லா இடங்களிலும் நீக்கமற பரவிக்கிடப்பவை எறும்புகள்தான் .' உலகில் உள்ள எல்லா மிருகங்களையும் எடை போட்டால், மொத்த எடையில் 25 சதவிகிதம் எறும்புகள்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள் . எறும்புகளுக்கு நம்மைவிட புத்தி அதிகம் . கற்பனாசக்தியும் அதிகம் !
நம்மைப் போல நகரங்களையும் சமூகத்தையும் நிர்மாணிக்கும் திறன் கொண்டவை . அதிகாரிகள், ஏவலர்கள், விவசாயிகள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் ... என எறும்புகளின் காலனியில் பல சமூக அடுக்குகள் உண்டு . நம்மைப் போலவே உபகரணங்களைப் பயன்படுத்தத் தெரிந்தவை . அவற்றுக்கு மருத்துவமும் தெரியும் என்று சொன்னால் பலருக்கு ஆச்சர்யமாக இருக்கும் ! எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றுக்கு சிந்திக்கவும், திட்டமிட்டு வேலை செய்யவும் தெரியும் .
மனிதனுக்கு அடுத்தபடியாக விவசாயம் செய்யத் தெரிந்த ஒரு ஜீவன், எறும்புகள்தான் . ஆன்டினி, அக்ரோமிர்மெக்ஸ் போன்ற ஒரு சிலவகை எறும்புகள் விவசாயம் செய்து சாப்பிடுகின்றன . இப்படி ஒன்று இரண்டு அல்ல, 200 வகை எறும்புகளுக்கு விவசாயம் செய்யத் தெரியுமாம் . இப்படிப்பட்ட எறும்புகளை ' லீஃப் கட்டர்கள் ' என்று பொதுவாகக் குறிப்பிடுகிறார்கள் .
நாம் விவசாயத்தில் பயன்படுத்தும் களையெடுத்தல், பூச்சிமருந்து தெளித்தல் போன்ற யுத்திகளையும் எறும்புகள் கையாள்கின்றன . பாலைத் தயிராக்கும் யுத்திக்கு சமமான ஒரு யுக்தியை எறும்புகளும் பயன்படுத்துகின்றன .
உணவுக்காக மனிதர்கள் ஆடு, மாடு வளர்ப்பதைப் போல எறும்புகளும் கால்நடைகளை வளர்க்கின்றன . எறும்புகளுக்கு கால்நடை மாதிரி இருப்பது 'ஆப்பிட்ஸ் ' என்ற ஒருவகை பூச்சிகள் . மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது மாதிரி எறும்புகள் இந்தப் பூச்சிகளை ஒரு சில செடிகளில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கின்றன . பிறகு தங்களுக்கு தேவைப்படும்போது அந்த பூச்சிகளின் வயிற்றில் சேர்ந்திருக்கும் இலைகளின் சாற்றை, அந்தப் பூச்சிகளின் வயிற்றை அழுத்தி வாய் வழியாக கறந்துவிடுகின்றன எல்லா எறும்புகளும் இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடுவதில்லை . எறும்புகளின் சமூகத்திலும் மாடு மேய்ப்பதற்கென்று தனியாக இருக்கும் ஓரினம்தான் . பூச்சிகளின் வயிற்றில் இருந்து தாவரச் சாற்றை சேகரித்து, தங்கள் காலனியில் இருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கு விநியோகம் செய்கின்றன !
--- சொந்தங்களே .... உயிர்களை உரசும் தொடரில், மேனகா காந்தி அவள் விகடன் 17 . 12 . 2010 இதழ் உதவி N. கிரி, நியூஸ் ஏஜென்ட் திருநள்ளாறு ( கொல்லுமாங்குடி )

No comments: