Tuesday, August 23, 2011

கங்கா ஸ்நானம் .

தலங்களுள் முதன்மை பெற்று விளங்குவது ... காசி . இங்கு வாரணா, அஸி என்ற இரு நதிகள் சங்கமம் ஆவதால் இதை வாரணாசி என்பார்கள் . காசிக்கு நிகரான பதியும் இல்லை ! கங்கைக்கு நிகரான நதியும் இல்லை ! காசியைப் பற்றி நூல்கள் சொல்வது : காசியை நினைத்தாலும் முக்தி, காசி என்று உரைத்தாலும் முக்தி, காசியைக் கண்ணால் கண்டாலும் முக்தி, காசியைக் காதால் கேட்டாலும் முக்தி, காசியில் வசித்தாலும் முக்தி, காசியில் வசிப்போரைக் கண்டு வணங்கினாலும் முக்தி . இந்த ஸ்தலத்தை பூலோக கயிலாயம் என்பார்கள் . இங்குள்ள காசிவிஸ்வநாதன் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று . புண்ணிய பாரதத்தில் முக்தி ஸ்தலம் 7 . அவை : காசி, காஞ்சி, மதுரை, ஹரித்வார், மாயா, அயோத்தி, துவாரகை என்னும் தலங்கள் ஆகும் . இவற்றில் முதன்மை வகிப்பது காசி . சக்தி பீடங்களுக்குள் இதுதான் முதல்பீட தலம் . இதற்கு ' கௌரிமுகம் ' என்ற திருப்பெயரும் உண்டு . இங்கு இறந்தோருக்கு அன்பால் முக்தியருளுவதால் ' அவிமுக்தம் ' என்ற பெயரும் உண்டு . ' பனாரஸ் ' என்னும் மன்னன் இந்த நகரை புதுப்பித்தான் . அதனால் பனாரஸ் என்றும் பெயர் ஆனது . மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் முதன்மையான ஸ்தானம் பெறுகிறது . காசி வந்தால் ஒரு இரவு தங்கினால்தான் புண்ணியம் நமக்குக் கிடைக்கும் . கங்கை தெற்கு நோக்கி ஓடுவது இயல்பு, ஆனால் இங்கு அவள் வடக்கு நோக்கி ஓடுகின்றாள் . இங்குள்ள விஸ்வநாதருக்கு கங்கா ஜலத்தில் அபிஷேகம் செய்து... பில்வம் அர்ச்சித்து... மூலவரை தொட்டு வணங்கலாம் . கங்கை நதிக்கரையில் 64 ஸ்நான கட்டங்கள் உள்ளன . கட்டங்களை இங்கு ' காட் ' என்பார்கள் . முக்கியமான ஒரு விஷயம்... இந்துவாக பிறந்த ஒவ்வொருவரும் இந்த ஜன்மாவில் ஒரு முறையாவது காசி கங்கை ஸ்நானம் செய்ய வேண்டுமாம் . ஏனெனில், இறந்த நம் பித்ருக்கள் கங்கைக் கரையில் நம் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கிடப்பார்களாம் . அங்கு ஒருமுறையாவது பித்ரு கடன் செய்தால்தான் அவர்களுக்கு நற்பிறவி கிடைக்குமாம் . பாவம் ! நம்மை பெற்று, வளர்த்து, ஆளாக்கி, வாழவைத்த தெய்வங்களுக்கு ( தாங்களாக ஏதும் செய்து கொள்ள இயலாத சூட்சும உருவில் உலவும் அவர்களுக்கு ) நிச்சயம் பித்ரு கடன்பட்டிருக்கிறோம் . பெரிய கடன் இது . இதை எல்லோரும்னினைவில் வைத்துக் கொள்வோம் . ----சசிரேகை . அவள் விகடன் . நவம்பர் 7 , 2003 .