Monday, July 4, 2011

மனிதனுக்கு மலேரியா வந்தது எப்படி ?

மலேரியா நோய்க்கிருமி சிம்பன்சி அல்லது கொரில்லா குரங்குகளிடம் இருந்தே மனிதனுக்கு பரவி இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் . ஒருவருக்கு ஒரு நோய் பாதித்தது என்றால் அது என்ன நோய், அதற்கு என்ன மருந்து என்பதை கண்டுபிடிப்பது ஒரு வகை ஆராய்ச்சி . இந்த நோய்க்கிருமியின் மூலம் எது ? நோய் மனிதனுக்கு எங்கிருந்து முதலில் பரவி இருக்கும் என ஆராய்வது இரண்டாவது வகை .
மலேரியா காய்ச்சல் வருவதற்கு ' பிளாஸ்மோடியம் பால்சிபரம் ' என்ற கிருமிதான் காரணம் . கண்ணுக்குத் தெரியாத இந்த கிருமி பல லட்சம் மக்களை ஆண்டுதோறும் பாடாய் படுத்தி வருகிறது . இந்த கிருமிகளை மனிதர்களுக்கு பரப்புவது கொசுக்கள்தான் . அதுவும் ' அனோபிலிஸ் ' எனப்படும் பெண் கொசுக்கள்தான், மலேரிய கிருமியை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரப்புகிறது
மலேரியா பாதித்த ஒருவரை கடிக்கும் கொசு, அப்படியே அவரது ரத்தத்தில் இருந்து பிளாஸ்மோடியம் பால்சிபரம் என்ற கிருமியை எடுத்துக்கொண்டு, பறந்து சென்று அடுத்தவர் உடலை கடிக்கும்போது, அவருக்கு அந்த காய்ச்சல் பரவுகிறது . ஆனால், பிளாஸ்மோடியம் பால்சிபரம் என்ற மலேரியா கிருமியை மனிதனுக்குள் பரப்பியது யார் ? என்ற ஆராய்ச்சியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அலபாமா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டனர் . ஆராய்ச்சி முடிவில் மனிதனுக்கு மலேரியா காய்ச்சலை வரவழைக்கும் பிளாஸ்மோடியம் பால்சிபரம் என்ற நோய் கிருமி சிம்பன்சி அல்லது கொரில்லா குரங்குகளிடமிருந்து தான் மனிதனுக்குள் பரவி இருக்கும் என்பதை கண்டுபிடித்துள்ளனர் .
சிம்பன்சி குரங்குகள் ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகம் வசிக்கின்றன என்பதாலும், மேலும் எய்ட்ஸ் நோய் கிருமிகள் சிம்பன்சி குரங்குகளிடம் இருந்துதான் மனிதனுக்கு பரவியது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மலேரியாவின் தாயகம், ஆப்பிரிக்க நாடுகளாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .
குரங்கில் இருந்து வந்தவன் மனிதன் என்பதோடு மனிதனுக்கு வரும் நோய்களும் குரங்கிடம் இருந்தே வந்தன என்ற நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
--- தினமலர் . 24 . 9 . 2010 .

No comments: