Wednesday, June 1, 2011

தியாகம் ! ?

" எல்லா தியாகங்களும் அங்கீகரிக்கப்படுகின்றனவா ? "
" அப்படிச் சொல்லிவிட முடியாது . 1984 - டிசம்பர் 3-ம் தேதி போபால் நகரின் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து மெத்தில் ஐசோ சயனேட் என்ற விஷவாயு கசிந்து , ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்துகொண்டு இருந்த தருணத்தில் , போபால் ரயில்வே ஸ்டேஷனில் துருவே என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி . போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோவில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் க்ளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார் . அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது . அவர் கண் முன்னால் ரயில்வே ஸ்டேஷனில் நின்ற நாய் ஒன்று சுருண்டு விழுந்தது . ரயில் நிலையத்தில் படுத்து உறங்கிக்கிடந்த பிச்சைக்காரர்கள் அலறி ஓடி விழுந்தார்கள் . துருவேக்கு ஏதோ விபரீதம் என்பது புரிந்தது . அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார் . எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்துவிடுவதுதான் அவரது நோக்கம் . ஆனால் , அந்த ரயில் ஏற்கனவே கிளம்பிவிட்டது . துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை . லக்னோ மும்பை ரயில் வந்தது . அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷவாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள் . ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள் . கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன . அந்தக் காட்சி துருவேயை நிலைகுலைய வைத்தது . பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார் . அங்கு அவருக்குக் கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக்கிடந்தார் . அவரை ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு , ' எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம் ' என்று தகவல் அனுப்பத் தொடங்கினார் . அதையும் மீறி வரும் ரயில்கள் ஜன்னலை மூடிக்கொண்டு போபால் ஸ்டேஷனில் நிற்காமல் வேகமாக போய்விடுமாறு அறிவுறுத்தினார் . மூக்கிலும் வாயிலும் வழிந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டு , இரவு முழுவதும் விழித்திருந்து வேலை பார்த்தார் . அந்த இரவு விடிந்தது . அடுத்த நாள் சிக்னல் அறையைத் திறந்தபோது , ஸ்டேஷன் மாஸ்டர் துருவே வாயில் ரத்தம் வழிந்த நிலையில் சிக்னல் அனுப்பும் கருவியை ஒரு கையால் பிடித்தபடி செத்துக்கிடந்தார் . துருவே மட்டும் இல்லை எனில் , போபால் விஷக் கசிவின் மரண எண்ணிக்கை இன்னும் சில ஆயிரங்கள் கூடியிருக்கும் . ஆனால் , போபால் நகரத்தில் விஷவாயு கசிந்த அந்த இரவில் மாநில முதல்வர் அர்ஜுன் சிங் , நகரில் இருந்து 14 கி. மீ. ஓடோடிச்சென்று தப்பித்தார் . இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு அர்ஜுன் சிங்கைத் தெரியுமா , துருவேயைத் தெரியுமா? "
--- கே. திலீபன் , நாகப்பட்டினம் . ஆனந்த விகடன் . 15 / 9 / 10 .

No comments: