Tuesday, May 31, 2011

தண்ணீர் குடிக்கணும் ?

எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்கணும் ?
தண்ணீரை கண்ட நேரத்தில் குடிக்காமல் எப்போது எந்தளவு குடித்தால் அதனால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துகொண்டு குடிப்பது நல்லது .
* காலையில் எழுந்ததும் பல் துலக்கி வெறும் வயிற்றில் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நம் உடலில் இருக்கும் உள்ளுறுப்புகள் நன்கு வேலை செய்ய உதவும் .
* சாப்பிடுவதற்கு 30 நிமிடங்கள் முன்னால் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது ஜீரண சக்தியை அதிகப்படுத்த உதவும் .
* குளிப்பதற்கு முன்னால் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது பிபியை கண்ட்ரோலில் வைக்கும் .
* இரவில் தூங்குவதற்கு முன்னால் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது தூக்கத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்படாமல் காக்கும் .
--- தினமலர் . 18 / 9 / 10.

Monday, May 30, 2011

போட்டி கணக்கு !

ஐந்து ( 5 ) என்ற நம்பரை நீங்கள் ஐந்து முறை பயன்படுத்திக்கொள்ளலாம் . எந்த கணக்கு குறியீடுகளையும் ( கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல், ஸ்கொயர்...எக்ஸ்ட்ரா... எக்ஸ்ட்ரா ) பயன்படுத்திக் கொள்ளலாம் . விடை மட்டும் 37 என்று வரவேண்டும் . எங்கே , உங்களுக்கு தெரிந்த வாய்ப்பாடு, சூத்திரம் எல்லாவற்றையும் பயன்படுத்தி இந்த விடையை கொண்டு வாருங்கள் , பார்க்கலாம் !
--- தினமலர் செப்டம்பர் 18 , 2010 .
விடை : ( ( 5 + 5 / 5 ) ) 5 + 5 = 37 . .
--- தினமலர் அக்டோபர் 2 . 2010 . 2 .10 .10 .

Sunday, May 29, 2011

பஞ்சாங்கம் .

" பஞ்சாங்கம் " என்றால் ஐந்து உறுப்புகள் கொண்ட அட்டவணை என்று பொருள் .
"வாரம் , திதி , கரணம் , நட்சத்திரம் , யோகம் இவைதான் பஞ்சாங்கத்தில் உள்ள ஐந்து உறுப்புகள் ."
ஞாயிறு முதல் சனி வரை உள்ள கிழமைகள்தான் வாரம் .
திதி என்பது சந்திரனின் பூமிசுற்றுப் பாதையின் 30 சமகோணப்பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்கும் காலத்தைக் குறிக்கும் . அமாவாசை, பிரதமை, துதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தி, பூரணை இவைகள்தான் திதி. ஒரு மாதத்தில் வளர்பிறைக் காலம், தேய்பிறைக் காலம் என்று இரு பகுதிகள் உள்ளன . ஒவ்வொரு பகுதியிலும் இந்த திதிகள் இருக்கும் . இந்த இரு பகுதிகளையும் பஞ்சாங்கத்தில் சுக்கிலபட்ச திதி , கிருஷ்ணபட்ச திதி என்பார்கள் .
கரணம் என்பது திதியின் அரைபங்கு . அதாவது 30 திதிகளுக்கு 60 கரணங்கள் .
நட்சத்திரம் என்பது ராசி சக்கரத்தில் ஒவ்வொன்றும் 13.33 பாகை அளவு கொண்ட 27 பகுதிகளைக் குறிக்கும் . சந்திரன் பூமியைச் சுற்றி வரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்தில் நடப்பதாகச் சொல்வார்கள் .
--- தினமலர் . செப்டம்பர் 17 , 2010 .

Saturday, May 28, 2011

பெடரோல் -- டீசல் !

கச்சா எண்ணெயை சுத்திகரித்துதான் பெட்ரோலும் டீசலும் தயாரிக்கப்படுகின்றன . சுத்திகரிப்பின்போது 35 முதல் 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பெட்ரோல் பிரித்தெடுக்கப்படுகிறது ; 250 முதல் 300 டிகிரியில் டீசல் பிரித்தெடுக்கப்படுகிறது .
டீசலை விட பெட்ரோலில் சுத்தத்தன்மை அதிகம் ; அடர்த்தி குறைவு . டீசலை விட பெட்ரோல் விரைவாகத் தீப்பற்றும் ஒரு கிலோ .பெட்ரோல் எரியும் போது, சராசரியாக 2,300 கிலோ கார்பன்டையாக்சைடு உருவாகும் ; ஒரு கிலோ டீசல் எரியும்போது , சராசரியாக 2,680 கிலோ கார்பன்டையாக்சைடு உருவாகும் .
பெட்ரோல் எஞ்சினைகளை விட டீசல் எஞ்சின்கள் நீண்டகாலம் உழைக்கும் . காரணம், எஞ்சின்களில் உராய்வைக் குறைக்கும் பொருட்களை ( லூப்ரிகன்ட்ஸ் ) பெட்ரோல் அழித்துவிடும் ; டீசல் அழிக்காது .
டீசலின் சக்தி அளவு , பெட்ரோலைவிட அதிகம் . இதனால்தான் டீசல் வாகனங்களின் மைலேஜ் ( ஒரு லிட்டருக்கு எத்தனை கி. மீ ., பயணம் என்ற கணக்கு ) அதிகம் . சராசரியாக சொல்வதானால் , ஒரு லிட்டர் பெட்ரோலில் 12 கி. மீ., போகலாம் ; ஒரு லிட்டர் டீசலில் 16 கி. மீ., போகலாம் . ஆனால், டீசல் வாகனங்களில் பெட்ரோல் வாகனங்கள் போல் வேகம் இருக்காது .
எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவு குறைத்து ' பணத்தில் ' லாபமடைய வேண்டுமானால் டீசல் வாகனம் நல்லது ; வாகனத்தின் வேகத்தை அதிகரித்து , ' நேரத்தில் ' லாபமடைய வேண்டுமானால் பெட்ரோல் வாகனம் நல்லது .
--- தினமலர் . செப்டம்பர் 17 , 2010 .

Friday, May 27, 2011

கணக்கு மேஜிக் !

உங்கள் நண்பரிடம் , " நான் ஒரு சிறு கணக்கு சொல்வேன் . விடையின் முதல் இலக்கத்தைச் சொன்னால் முழு விடையையும் நானே சொல்லிவிடுகிறேன் ! " என்று கூறுங்கள் .
பிறகு இப்படிச் சொல்லுங்கள் :
1 . ஏதாவது மூன்று இலக்க எண்ணை எழுதிக்கொள்.
2 . அந்த எண்ணை மாற்றி எழுது . ( அதாவது 123 என்றால் 321 ).
3 . இரு எண்களில் பெரியதில் இருந்து சிறியதைக் கழி .
4 . விடையில் 3 இலக்கங்கள் இருந்தால் முதல் இலக்கத்தைச் சொல் . விடை இரண்டு இலக்கமாக இருந்தால் முதல் இலக்கம் '0 ' என்று சொல் .
இதன்பிறகு நீங்கள் செய்ய வேண்டியது , ஒரு சிறிய கணக்கு ...
நண்பர் சொல்லும் எண்ணை 9 -ல் இருந்து கழிங்க .அதுதான் , விடை எண்ணின் கடைசி இலக்கம் ; நடு இலக்கம் எப்போதுமே 9 ஆகத்தான் இருக்கும் ! பிறகு இந்த 3 இணைத்துச் சொல்லி அசத்துங்கள் !
அவர் முதல் இலக்கம் 0 என்று சொன்னால் , நீங்கள் எந்தக் கணக்கும் செய்யாமல் ' 99 ' என்று சொல்லிவிடலாம் !
ஒரு உதாரணம் : நண்பர் நினைத்த எண் 234 ; மாற்றி எழுதினால் 432 ; 432 ல் இருந்து 234 -ஐக் கழித்தால் , 198 ; உங்கள் நண்பர் சொல்லும் முதல் இலக்கம் 1 ; இதை 9ல் இருந்து கழித்தால் 8 ; எனவே , விடையின் கடைசி இலக்கம் 8 ; நடு இலக்கம் ( எப்போதுமே ! ) 9 ; எனவே; நீங்கள் சொல்ல வேண்டிய விடை 198 .
--- தினமலர் . செப்டம்பர் 17 , 2010 .

Thursday, May 26, 2011

வளைந்த காய்...ஏன் ?

வாழைக்காய் நேராக இல்லாமல் சிறிது வளைந்திருக்கும் . ஏன் தெரியுமா?
ஆரம்பத்தில் வாழைப் பூவுக்குள் இவை சிறிய வடிவில் இருக்கும்போது கீழ் நோக்கி வளரும் . ஒளிச்சேர்க்கை ( போட்டோ ஸிந்தஸிஸ் ) மூலம்தான் இவை பெரிய காயாக மாறும் . அப்படி மாறுவதற்கு அதிகமான சூரிய ஒளி தேவை . அதற்காக , இவை சிறிது மேல்நோக்கி வளையும் . இந்த செயல்பாட்டுக்கு, ' நெகட்டிவ் ஜியோடிராபிஸம் ' என்று பெயர் . இதனால்தான் வாழைக்காய்கள் வளைந்த உருவத்தை அடைகின்றன .
--- தினமலர் , ஆகஸ்ட் 27 , 2010

Wednesday, May 25, 2011

விண்வெளி பேனா !

விண்வெளியில் பயன்படுத்துவதற்கு , ஒரு விசேஷ பேனா உள்ளது . இதை ' ஜீரோ கிராவிட்டி பென் ' என்பார்கள் . புவிஈர்ப்பு விசை இல்லாத அல்லது குறைந்த இடங்கள் , இயல்புமீறிய அழுத்தம் மற்றும் வெப்பப் பகுதிகள் , தண்ணீருக்குள் உள்ள பகுதிகள் என எல்லா இடங்களிலும் இந்த விசேஷ பேனாவைப் பயன்படுத்தி எழுதலாம் . இந்த சிறப்பு எப்படி வருகிறது ?
இந்தப் பேனாவில் , அதிக அழுத்தம் கொண்ட கார்ட்ரிட்ஜ் ஒன்று இருக்கும் . அதில் தண்ணீரில் கரையாத விசேஷ தன்மைகொண்ட மை நிரப்பப்பட்டிருக்கும் . கார்ட்ரிட்ஜின் அதிக அழுத்தம் காரணமாக , இந்தப் பேனாவில் உள்ள மையின் ஓட்டத்திற்கு புவிஈர்ப்பு விசை தேவைப்படாது !
--- தினமலர் , ஆகஸ்ட் 27 , 2010 .

Tuesday, May 24, 2011

மேஜிக் 7

உங்கள் நண்பரிடம் நீங்கள் சொல்லவேண்டியவை :
1 . ஏதாவது 3 இலக்க எண்ணை கால்குலேட்டரில் பதிவுசெய் .
2 . அதன் அருகில் அதே 3 இலக்க எண்ணை மீண்டும் ஒரு முறை பதிவு செய் .
3 . இந்த 6 இலக்க எண், 11ஆல் மீதமின்றி வகுபடும் பார் ! (' ஆமாம் ' என்பார் நண்பர் .).
4 . வரும் விடை, 13 ஆல் மீதமின்றி வகுபடும் பார் ! ( ' ஆமாம் ' என்று நண்பர் மீண்டும் வியப்படைவார் ! )
5 . வரும் விடையை, நீ முதலில் நினைத்து, பதிவு செய்த எண்ணால் வகுக்க வேண்டும் . அதன் விடையை நீ கண்டுபிடிக்கும் முன்பே நானே சொல்கிறேன் ... விடை ' 7 ' !
( நண்பர் வகுத்தபின், '' கரெக்ட் ' என்று அசந்துபோவார் ! )
ஒரு உதாரணம் : உங்கள் நண்பர் நினைத்து, பதிவு செய்த எண் 123 என்று வைத்துக் கொள்வோம் . அதே எண்ணை அருகில் எழுதினால் 123123 . இதை 11 ஆல் வகுத்தால் 11193 . இதை 13 ஆல் வகுத்தால் 861 . இதை 123 ஆல் வகுத்தால் விடை 7 !
டெக்னிக் இதுதான் : எந்த ஒரு 3 இலக்க எண்ணையும் 1001 ஆல் பெருக்கினால் அதே எண் அதன் அருகில் இருக்கும் வகையிலான 6 இலக்க எண் வரும் . 11, 13, 7 ஆகிய மூன்று எண்களைப் பெருக்கினால் 1001 ; எனவே அந்த 6 இலக்க எண்ணை 11 மற்றும் 13 ஆல் வகுத்துவிட்டு பிறகு ஒரிஜினல் 3 இலக்க எண்ணால் வகுத்தால், விடை எப்போதுமே ' 7 ' தான் !
--- தினமலர் , ஆகஸ்ட் 27 , 2010 .

Monday, May 23, 2011

அர்த்த சாஸ்திரம் ...

பாரம்பரியச் சொத்துக்களைக் கரைப்பவனுக்கு ' மூலஹரன் ' என்று பெயர் .
தனது சம்பாத்தியத்தை ஆடம்பரத்தாலும் தின்றும் தீர்ப்பவனுக்கு ' தாதாத்ரிகன் ' என்று பெயர் .
தான் காப்பாற்ற வேண்டியவர்களையும் தன்னையும் கூடக் கஷ்டப்படுத்திக் கொண்டு பணத்தைச் சேர்த்து வைப்பவனுக்கு ' சுதர்மன் ' என்று பெயர் .
இந்த மூன்று வகையானவர்களையும் அரசாங்ககத்தில் இல்லாமல் செய்ய வேண்டும் .
--- ' அர்த்தசாஸ்த்திரம் ' நூலில் சாணக்கியரின் அறிவுரை .

Sunday, May 22, 2011

தர்மம் தலைகாக்கும் .

இருப்பதற்கும் கொடுப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னாலும் உண்மையில் இருக்கிறது . இருந்தால்தானே கொடுக்க முடியும் ? இல்லாததை எவராலும் கொடுக்க முடியாதே ? -- இப்படியாக பலரையும் குழப்புகிறது ஒரு சர்வே . தர்ம சிந்தனை எந்த அளவுக்கு ரத்தத்தில் ஊறியிருக்கிறது என்று கண்டுபிடிக்க நடந்த சர்வே . 153 நாடுகளில் நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது . சேரிடீஸ் எய்ட் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு , எந்த நாட்டுக்கு எந்த இடம் என்பதை பார்த்து பலருக்கு ஏற்பட்டுள்ள குழப்பம்தான் மேல்பத்தியில் பிரதிபலிக்கிறது .
ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் நல்ல மனசு நாடுகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கின்றன . அடுத்து வருவது கனடா , அயர்லாந்து . முதலாவதில் 57 % மக்களும் இரண்டாவதில் 56 % மக்களும் கடந்த ஒரு மாதத்தில் பலருக்கு பல தடவை உதவி செய்திருக்கிறார்கள் . பணம் கொடுத்திருக்கிறார்கள் . இந்தியாவுக்கு 134 வது இடம் என்பது அநியாயமாக தெரிகிறது . திருவோட்டிலும் தீபாராதனை தட்டிலும் காசு போடுவது இந்த கணக்கில் சேராது போலிருக்கிறது . பாகிஸ்தான் ஸ்கோர் 142 , சீனா 147 என்பது புண்பட்ட மனதுக்கு ஆறுதலாகலாம் .
பணம் கொடுப்பது, நேரம் ஒதுக்குவது, முன் பின் தெரியாத எவருக்கேனும் உதவுவது -- இப்படி மூன்று ரகமாக தயாள குணத்துக்கு இலக்கணம் வகுத்திருந்தது கேள்வித்தாள் .
தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர்காக்கும் என்ற நம்பிக்கை உள்ளது நமது நாடு . மெடிகிளெய்ம், ஆயுள் இன்சூரன்ஸ் என்று பாழாக்காமல் தர்மத்தில் முதலீடு செய்பவர்கள் அதிகம் . அப்படிப்பட்ட நமக்கா இத்தனை மோசமான மதிப்பெண் என்று ஆச்சர்யமாக இருக்கிறது .
வறுமையில் வாடும் சியராலோன், லைபீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் 11 வது , 39 வது ரேங்க் எடுத்திருப்பதை பார்க்கும்போது இன்னும் வெட்கமாக இருக்கிறது . ஸ்ரீலங்காவுக்கு எட்டாமிடம் . இவர்களிடம் பணம் இல்லை; ஆனால் உதவும் மனம் இருக்கிறது . தங்கள் நேரத்தையும் உழைப்பையும் தானமாக வழங்குவதில் தாராளமாக இருக்கின்றனர் என்கிறது சர்வே .
ஆயில் கொழிக்கும் அரபுநாடுகளும் எதற்கோ அள்ளிவிடுகின்றன, இதற்கில்லை . இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்று எந்த நாடும் சட்டம் இயற்றவில்லை . அது ஒரு கலாசாரம் .
--- தினகரன் தலையங்கம் , செப்டம்பர் 10 , 2010 வெள்ளிக்கிழமை

Saturday, May 21, 2011

கார் திருட்டு !

கார் திருட்டை கண்டுபிடிக்க புதுகருவி .
எப்படித் திருடிக்கொண்டு போனாலும் காரே அதன் உரிமையாளர்களுக்கு காட்டிக்கொடுக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கருவி சந்தைக்கு வந்துவிட்டது . டிகாப் என்ற செல்போன் தொழில்நுட்ப அடிப்படையிலான இந்த கருவியை பெங்களூரைச் சேர்ந்த ஐ டிரான்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது . இந்த கருவியின் செயல்பாடு குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மல்லேஸ் ரெட்டி கூறியதாவது : டிகாப் கார் திருட்டு கருவியை செல்போன் சிம்கார்டுடன் இணைத்து செயல்பட வைக்கிறோம்
கார் திருடு போனாலோ, காரின் கண்ணாடியை உடைத்தாலோ, கார் கதவை அழுத்தி தொட்டாலோ அதுபற்றி உடனே எஸ் எம் எஸ்ஸில் உரிமையாளருக்கு இந்த கருவி தகவல் தந்துவிடும் . அதைப் பார்த்த உடன், அபாய சமிக்ஞை செய்யும்படி அதே எஸ். எம் . எஸ்சில் மறு தகவல் அனுப்பினால் கார் குய்யோ முறையோ என்று கத்தி ஊரைக்கூட்டிவிடும் . இதனால் திருடன் கையும் களவுமாக பிடிபட்டுவிடுவான் . இந்த எஸ். எம். எஸ் சேவைக்காக வோடபோன் நிறுவனத்துடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம் . அதுபோல கார் உரிமையாளர் அனுமதி இன்றி அவரது உறவினர்கள் வண்டியை எடுத்துச் சென்றாலும் இதேபோல எஸ்.எம்.எஸ். எச்சரிக்கை தகவல் வரும் . திருடு போன கார் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கண்டுபிடித்துக்கொள்ளலாம் . அத்துடன் கார் காணாமல் போனதில் இருந்து 72 மணி நேரம் வரை அது சென்ற பாதை பற்றிய முழுதகவலையும் பெறமுடியும் . கார்களுக்கு மட்டுமல்ல பள்ளி வேன்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கும் இந்த கருவியை பொருத்திக்கொள்ளலாம் . இந்த கருவியின் அறிமுக விலை 7 ஆயிரம் ரூபாய் . இவ்வாறு மல்லேஸ் ரெட்டி கூறினார் .
--- தினமலர் .12 . 9. 2010 .

Friday, May 20, 2011

அந்த நேர ஆசை !

வனவாசம் . ராவண வதம் எல்லாம் முடிந்து அயோத்திக்குத் திரும்பிய பிறகு சீதை கருவுருகிறாள் . கருவை வயிற்றில் சுமந்த சீதைக்கு ஒரு வித்தியாசமான ஆசை . ''வனவாசத்தின் போது தங்கியிருந்த இடங்களையும் காடுகளையும் பார்க்க வேண்டும் ' என்கிறாள் சீதை . ராமபிரான் அதைப் பிடிவாதமாக மறுத்துவிட்டார் . ' நம் மனதில் துயரமான எண்ணங்களைப் பதிய வைத்த இடங்கள் அவை . சந்தோஷமான இந்தத் தருணத்தில் அங்கு ஏன் போக வேண்டும் ? ' என்று கேட்டார் ராமபிரான் .
ஆனால், அரசவையில் இருந்த முனிவர்கள் எல்லோருமே சீதையின் பக்கம்தான் ! ' கர்ப்பிணியின் மசக்கை விருப்பத்தை அலட்சியம் செய்யக்கூடாது . தேவியைக் கூட்டிச் சென்று அவர் விரும்பும் இடங்களைச் சுற்றிக் காட்டு ராமா ! ' என்று உத்தரவிட்டார்கள் .
கருவின் இதயம் தாயிடமிருந்துதான் உருவாகிறது . இரண்டு இதயங்களும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ள நேரத்தில் ஏற்படும் ஆசைகளைத் தான் ' மசக்கை ' என்கிறோம் அதை நிறைவேற்ற வேண்டியது குடும்பத்தாரின் கடமை .
--- ஆனந்தவிகடன் .

Thursday, May 19, 2011

ரகசியம் .

62 , 81 .
ஸ்ரீராமர் 23 ஆண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்து , தமது 62 ம் வயதில் கி. மு. 4377 ம் ஆண்டு சைத்ர மாதம் இந்தப் பூமியிலிருந்து மறைந்தார் .
பாரதப் போர் முடிந்து 36 ஆண்டுகளுக்குப் பின் ஸ்ரீகிருஷ்ண பகவான் கி. மு. 3031 ஏப்ரல் மாதம் 13 ம் தேதி , தம் 81 ம் வயதில் விண்ணுலகை அடைந்தார் .
--- ' இதிகாச நிகழ்ச்சிகள் ' கட்டுரை -- ' மஞ்சரி ' மே இதழ் 1995 .

Wednesday, May 18, 2011

ஸ்ரீராமானுஜர் .

நிஜமா ? சிலையா ?
ஸ்ரீராமானுஜர் அத்திபூத்தாற்போல் அவதரித்த ஞானிகளில் ஒருவர் . 11 ம் நூற்றாண்டில் பிறந்து - 120 ஆண்டுகள் வாழ்ந்து - 12 -ம் நூற்றாண்டில் மறைந்தவர் . விசிஷ்டாத்வைதம் எனும் தத்துவத்தை அளித்தவர் . இறைவனுக்குத் தொண்டு செய்வதில் , ஜாதி, மத பேதங்கள் இல்லையென அந்த நாட்களிலேயே கூறியவர் . இறைவன் செல்லப்பிள்ளையைத் தொடர்ந்து ஓடிவந்த முஸ்லீம் பெண்ணைப் பெருமாளுக்கே திருமணம் செய்து வைத்தவர் . ஆதிதிராவிடர்களைத் திருக்குலத்தவர் என்று அழைத்தவர் .
இத்தனை சிறப்புகள் கொண்ட ஸ்ரீராமானுஜருக்கு , ஸ்ரீரங்கத்தில் உள்ள அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோயிலில் , தனிக் கோயில்போல பெரிய சன்னதி ஒன்று இருக்கிறது . அந்த சன்னதியில் திரிதண்டத்துடன் அமர்ந்த நிலையில் இருக்கும் மூலவரைப் பார்த்தால் சிலையென்று நம்புவது கடினம் .
அந்த மூலஸ்தானத்தில் இருப்பது , 865 ஆண்டுகளுக்கு முன்பு ( ஜனனம் 1017 ; சமாதி 1137 ) மறைந்த ராமானுஜரின் திருவுருவம்தான் என்று ஒரு சாராரும் , இல்லை , சுதையால் ஆன சிலைதான் என்று மறு சாராரும் கூறுகிறார்கள் .
--- கோலாகல ஸ்ரீ நிவாஸ் , எம். பாண்டியராஜன் . தினமணிகதிர் , மார்ச் 5 , 1995 .

Tuesday, May 17, 2011

' ஸ்ரீ ராம ஜயம் '

முதன் முதலில் ஸ்ரீ ராம ஜயம் என்பதை எழுதிய மகாபுருஷரே திருமணம் ஆகாத , புலன் அடக்கம் உள்ள , கட்டை பிரம்மச்சாரி ஆஞ்சநேயர் .
' ராம ராவண யுத்தம் முடிந்த பிறகு ஸ்ரீ ராமரின் வெற்றிச் செய்தியைச் சீதையிடம் சொல்லவந்தார் ஸ்ரீ ஆஞ்சநேயர் . உணர்ச்சி ததும்பிய நிலையில் அந்தச் சொல்லின் செல்வனால் பேசமுடியவில்லை . கண்களில் ஆனந்தக் கண்ணீர் கோலமிட்டது .
உணர்ச்சி கொப்பளிக்கும்போது சொற்கள் வாய்வழி வரமறுப்பது உலக இயற்கை . என்ன செய்தி என்று பிராட்டி ஆர்வத்துடன் கேட்டதும் , முன்னால் கிடந்த மணல் மீது ஸ்ரீ ராம ஜயம் என்று கைவிரலால் அனுமன் எழுதினார் என்பது குறிப்பு .
--- சுகி சிவம் . அவள் விகடன் / அக்டோபர் 1 / 1999 .

Monday, May 16, 2011

டிப்ஸ் .

* வாழை குலை போட்டிருந்தால் , தாரை அறுத்ததும் அதன் மேல்புறத் தண்டில் வேப்பங்குச்சியைச் செறுகி வைத்தால் , பழம் ஒரே சீராகப் பழுத்துவிடும் .
* காலையில் பலகாரத்திற்குப் பதில் நான்கு காரட் எடுத்து தோல் சீவி நறுக்கி எடுத்து , சிறிது இஞ்சி , சிறிது கொத்துமல்லி சேர்த்து எலுமிச்சை சாறு சிறிது பிழிந்து தேவையான தண்ணீர் விட்டு கலந்து குடிக்கவும் . ஒரு மாதம் இப்படி குடிக்க உடல் எடை குறையும் .
* 'ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி ' படத்தில்தான் முதன்முதலில் ' விக் ' பயன்படுத்தப்பட்டது . அதற்கான விக் கல்கத்தாவிலிருந்து அரி பாபு என்பவரால் செய்யப்பட்டு சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது .
* அசுத்த ரத்தத்தைக் கொண்டுபோகும் ரத்தக்குழாயில் ஏற்படும் முடிச்சுதான் ஆசன வாய் அருகே உள்ள ரத்தக் குழாயில்தான் விழும் . அதுதான் ' மூலம் ' என்ற நோய்
* படுக்கை அறையின் விதானத்தில் நட்சத்திரம் , கோள்கள் என்று இரவில் ஒளிரும் ( ஃப்ளோரஸன்ட் ) ஸ்டிக்கர்களை ஒட்டுவது தற்போது பரவி வருகிறது . இந்த ஸ்டிக்கர்களை வேறுவிதமாகவும் பயன்படுத்தலாம் . அதாவது , ஸ்விட்ச் போர்டு , மெழுகுவர்த்தி மற்றும் தீ பெட்டி வைக்கும் இடம் , டார்ச் லைட் உள்ள அலமாரி என்று ஒட்டி வைத்தால் .திடீரென கரன்ட் கட் ஆகும் சமயங்களில்... கைகொடுக்கும் ..

Sunday, May 15, 2011

ரகசியங்களின் முடிவு.

ரகசியம் அம்பலமாகி விட்டதே என்று ஒரு நாடே ஆதங்கத்தில் இருக்கிறது . ராணுவ ரகசியமோ , அதிபரின் குடும்ப ரகசியமோ கிடையாது . நாடகத்தின் கடைசி சீன் !
அகதா கிறிஸ்டி தெரியாதவர்கள் குறைவு . கிரைம் நாவல்களின் தாய் . ஆங்கிலத்தில் 80 நாவல்கள் , 27 நாடகங்கள் , ஏகப்பட்ட சிறுகதைகள் எழுதி குவித்து ஷேக்ஸ்பியருக்கு அடுத்த இடத்தை வகிப்பவர் . அவர் படைப்புகள் 103 மொழிகளில் 400 கோடி பிரதிகள் விற்பனையாகி இருக்கின்றன . அதைவிட அதிகம் விற்றது பைபிள் மட்டுமே . ' மவுஸ்டிராப் ' -- எலிப்பொறி -- இவருடைய பிரபல நாடகம் . ஒரு விடுதியில் கொலை நடக்கிறது . கொலையாளி யார் என்பது கடைசி காட்சியில் தெரியும் . ' இந்த முடிவை யாரிடமும் சொல்லாதீர்கள் ' என்ற வேண்டுகோளுடன் திரை இறங்கும் .
சென் மார்ட்டின்ஸ் தியேட்டரில் நாட்கம் 63 ஆண்டுகளாக தொடர்ந்து நடக்கிறது . லண்டனுக்கு செல்பவர்கள் தவிர்க்க முடியாத அனுபவம் . இதுவரை 24 ஆயிரம் ஷோ ; ஒரு கோடி பேருக்குமேல் பார்த்திருக்கிறார்கள் . எவரும் முடிவை வெளியே சொல்லவில்லை . அப்படி காப்பாற்றப்பட்ட ரகசியத்தை இன்டர்நெட் கலைக்களஞ்சியம் ' விக்கிபீடியா ' உடைத்துவிட்டது . இதனால் இங்கிலாந்து ,மக்கள் மனம் உடைந்து அரற்றுகிறார்கள் . நாடகத்தின் உரிமையை பிறந்தநாள் பரிசாக பெற்ற அகதாவின் பேரன் கொதிக்கிறார் . கூட்டம் குறையும் என்ற பயத்தால் அல்ல . 2011 மே 14 வரை ஹவுஸ்ஃபுல் , டிக்கெட் கிடையாது .
அகதாவின் அநேக படைப்புகள் சினிமா வடிவம் பெற்றுள்ளன . மவுஸ்டிராப்பை படமெடுக்க உரிமம் பெற்றவருக்கு அதிர்ஷ்டம் பிறக்கவில்லை . ' நாடகம் நிறுத்தப்பட்டு 6 மாதம் ஆனபின் படப்பிடிப்பை தொடங்கலாம் ' என்பது ஒப்பந்த ஷரத்து . கடல் வற்றியதும் மீன் பிடிக்க காத்திருக்கிறார் பட அதிபர் .
ரகசியம் இல்லாமல் சுவாரசியம் ஏது ? எவருக்கும் தெரியாத ஒன்று எனக்கு தெரியும் என்பதாகட்டும் ; நான் செய்த தப்பு எவருக்கும் தெரியக் கூடாது என்பதாகட்டும் ; பயங்கரமான ரகசியம் தெரிந்துவிட்டது , அதை சொல்லாவிட்டால் தலையே வெடித்துவிடும் என்பதாக இருக்கட்டும் , அது வாழ்க்கைக்கு ருசி சேர்க்கிற சமாசாரம் . இன்டர்நெட் தாக்கத்தில் ரகசியம் என்ற வார்த்தையே அழிவின் எல்லைக்கு வந்துவிட்டது .
--- தினகரன் தலையங்கம் , செப்டம்பர் 5 , 2010 ஞாயிற்றுக்கிழமை .

Friday, May 13, 2011

ஓசோன் படலம் காப்போம் !

ஓசோன் என்பது மூன்று ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை உடைய வாயு . அது நீல நிறத்தில் , நெடியுடன் இருக்கும் . இது வளி மண்டலத்தில் புவியைச் சுற்றிலும் 60 கிலோமீட்டருக்கு மேலே , 3 மில்லிமீட்டர் தடிமனில் உள்ளது . இந்தப் பகுதியைத்தான் ஓசோன் படலம் என்கிறார்கள் .
சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் , உயிரினங்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை . இவற்றால் வெப்பமும் அதிகரிக்கும் . இந்தக் கதிர்கள் புவியை அணுகவிடாமல் தடுத்து ஓசோன் பாதுகாக்கிறது .
நாம் பயன்படுத்தும் வேதிப்பொருட்களில் இருந்து வெளியேறும் வாயுக்கள் மேலே செல்லும் .அவை ஓசோனுடன் கலக்கும்போது நடக்கும் ரசாயன மாற்றங்களால் ஓசோன் அளவு குறைந்து ஓசோன் படலத்தில் இடைவெளி ஏற்படும் . இதைத்தான் ஓசோன் படல ஓட்டை என்கிறார்கள் .
இந்த ஓட்டைகள் வழியாக சூரியனின் புற ஊதாக்கதிர்கள் ஊடுருவும்போது , பூமியில் உள்ள மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு உடல்நலக் கேடுகள் அதிகரிக்கும் .
பாதிப்புகள் .
ஓசோனை அழிக்கும் வாயுக்களால் , அண்டார்டிகா பகுதியின் மீதான ஓசோன் படலத்தில் 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது . இதுபோல் , ஆர்டிக் பகுதியின் மீதான ஓசோன் படலத்திலும் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது .
நைட்ரஜன் மோனாக்சைடு , நைட்ரஜன் டையாக்சைடு , குளோரின் போன்றவற்றோடு தலைச் சாயம் , நறுமணப்பொருட்கள் , ப்ரிட்ஜ் , ஏசி போன்றவற்றில் குளிர்விக்க உதவும் குளோரோஃபுளோரோ கார்பன் போன்றவைதான் ஓசோன் படலத்தை கிழித்துவரும் நச்சு வாயுக்கள் .
---. தினமலர் / 11 . 9 . 2010.

Wednesday, May 11, 2011

' தத்வமஸி '

' நான் வேறு , அடுத்தவர் வேறு ' என்ற எண்ணம்தான் எல்லாப் பிரச்னைகளுக்கும் ஆணிவேர் .
ஆணிவேர் வெட்டப்பட்டால் மரம் சாய்ந்து விடும்.... ' ஒப்பீடு ' எண்ணத்தை அகற்றிவிட்டால் பிரச்னைகள் ஓய்ந்துவிடும் .
இதைத்தான் --
நமது ஆன்மிகப் பாரம்பரியம் , ' தத்வமஸி ' என்ற அடிப்படை அறிவுரையாக்கியுள்ளது !
தத்வமஸி = தத் + த்வம் + அஸி . தத் என்றால் ' அது '; த்வம் என்றால் ' நீ '; அஸி என்றால், அறிவாயாக ! ' அதாவது , ' அதுவே நீ என்று அறிவாயக ! ' என்பதே ஆன்மிகத்தின் அடிப்படை அறிவுரை .
'அது ' என்பது அடுத்தவரின் அனுபவங்கள் ; ' நீ ' என்பது உங்களுடைய அனுபவங்கள் .
'அதுவே நீ என்று அறிவாயாக ' என்றால் , ' அடுத்தவரும் நீங்களும் சமம் ' என்று அர்த்தம் .
அடுத்தவரும் நீங்களும் சமம் என்ற நிலையில் , அடுத்தவரையும் நம்மையும் ஒப்பிட வேண்டிய அவசியம் எதற்கு ? அது வீண்வேலை அல்லவா ?
---. தினமலர் / 11 . 9 . 2010.

Tuesday, May 10, 2011

எடையை குறைக்க ....

எடை குறைய 2 டம்ளர் தண்ணீர் !
ஒரு புதிய ஆராய்ச்சியின் மூலம் உடல் எடை குறைவதற்கு ஒரு எளிய வழி கண்டுபிடிக்கப்படுள்ளது . அது ? சாப்பிடுவதற்கு முன்னால் ஒரு டம்ளர் அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது .
' மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன்பு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு உணவு அருந்துவது மூலம் 12 வாரங்களில் இரண்டரை கிலோ வரை குறையும் ' என்று சமீபத்தில் வெளியான ஒரு மருத்துவ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது .
' தண்ணீரில் கலோரி கிடையாது . சாப்பிடும் முன் தண்ணீர் குடித்தால் வயிறு பெருமளவு நிரம்பிவிடும் . பிறகு , குறைவாகவே உண்ணுவோம் . அதனால் நம் உடலில் சேரும் கலோரியும் குறையும் ' என்று கூறுகிறது இந்த ஆய்வறிக்கை .
--- தினமலர் / 11 . 9 . 2010.

Monday, May 9, 2011

வீட்டுக் குறிப்பு...

வெண்ணெய் வெட்டும் கத்தி !
* வெண்ணெயைக் கத்தியால் வெட்டுவது கொஞ்சம் இம்சையான சமாசாரம் . கத்தியில் வெண்ணெயை ஈஷிக் கொள்ளும் . இந்த உறவைப் பிரிப்பது எப்படி ? கத்தியைத் தண்ணீரில் முக்கிவிட்டு பிறகு வெண்ணெயை வெட்டிப் பாருங்கள் . கத்தி சுத்தமாக வெளியே வந்துவிடும் .
தயிர் வந்தது ; கறைபோச்சு !
* வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் உள்ளவரா நீங்கள் ? உங்கள் சட்டை மீதே நீங்கள் துப்பிக் கொள்ளும் அபாயம் இருக்கிறதே ! இப்போது புளித்த தயிர் உங்களுக்குக் கை கொடுக்கும் . ஒரு துணியைத் தயிருடன் நட்பாக்கி கறைமீது தடவுங்கள் . கறை பளிச் .
மிக்ஸி சொன்னபடி கேட்க...
* மாதத்திற்கு ஒருமுறை....கொஞ்சம் கல்லு உப்பை எடுத்து மிக்ஸியில் போட்டு அரையுங்கள் .எதையும் அரைக்க மாட்டேன் என்று சத்தியாகிரகம் செய்த பிளேடுகள் பளபளப்பான கூர்னையோடு தன் கடமையைச் செவ்வனே நிறைவேற்றத் தயாராகிவிடும் . தூள் உப்பு கிடைப்பது போனஸ் !
ஒரு தேனான தகவல் ...
* அடுப்படியில் வேகும் அம்மையரா நீங்கள் ? அடுப்பின் நேரடிச் சூடு உங்கள் கைகளை , மென்மையாக உள்ள புறங்கைகளை ஆவலுடன் தீண்டியிஉக்குமே ! கொஞ்சம் அலமாரியைத் திரும்பிப் பாருங்கள் . அங்கே தேன் பாட்டில் , ' மே ஐ ஹெல்ப் யூ ? ' என்று கேட்கும் . அதன் உதவியை நாடுங்கள் . பாதிக்கப்பட்ட பகுதியில் தடவுங்கள் . அன்றைக்கு மட்டுமல்ல ;மறுநாளும் ஜோராக சமையல் செய்யலாம் .
--- ராமுசாமி ,தினமணி கதிர் 20 / 5 / 1990.

Sunday, May 8, 2011

சீன கைரேகை சாஸ்திரம் .

சீன கைரேகை சாஸ்திரப்படி , ஒருவனுடைய கை , ஒரு மரம் போன்றது . அடியில் ஸ்திரமான பூமி - நிலம் . அதிலிருந்து பீறிடும் உணர்ச்சிகள் - நீர் . அதிலிருந்து தோன்றும் கற்பனாசக்தி - நெருப்பு - இது சார்ந்திருக்கும் புத்தி - காற்று இவையெல்லாவற்றின் பலன் தான் ஆகாயம் - ஆன்மீக உணர்வு .
கைகளின் அமைப்பு இதன் அடிப்படையில்தான் அமைந்திருக்கிறது . அதன்படிதான் அவர்களின் குணமும் இருக்கிறது .
-- விஜயா ஸ்ரீதரன் . மங்கையர் மலர் / டிசம்பர் 2002 .

Saturday, May 7, 2011

' நியாயக்களஞ்சியம் '

கரி நியாயம் ( அங்கார நியாயம் ) :
கரியைக் கையிலெடுத்தால் அது சூடுடையதாய் இருக்கும் போது சுட்டுப் புண்ணாக்குகின்றது . குளிர்ந்திருக்கும் போது சுடாவிடினும் கையை மாசுபடுத்துகிறது . எனவே , அது எந்நிலையிலிருப்பினும் அதன் கூட்டுறவால் தீமையே விளைகிறது . தீயோர் கூட்டுறவும் அத்தகையதே .
கழுதைக் குரல் ( ராய பருத நியாயம் ) :
கழுதையின் குரல் தொடக்கத்தில் பெரிதாகவே தொடங்கி உச்சத்துக்குச் சென்று பின் இறங்கி மத்யமமாகிப் படிப்படியே இறங்கி அடங்கிவிடும் . கீழோர் அன்பும் பெரிதாகவே தொடங்கி வளர்ந்து பின் படிப்படியாய்த் தேய்ந்து பின் இல்லயாகும் .
கற்பகத்தின் பழம் உடனே பயன்படுகின்றது என்னும் நியாயம் :
கற்பக மரத்தின் காய் தோன்றியவுடனே பழுத்துவிடுமாம் . ஏனைய மரங்களின் காய்கள் தோன்றிப் பன்னாளைக்குப் பின்னர் மலர்வது போல அன்று . அதுபோலவே புண்ணியவான் விருப்பம் உடனே இறைவேறும் . ( கர்பக மரமும் பருவத்தில்தான் பழந்தருமெனில் ஏனைய மரங்களைவிட அதற்கு என்ன சிறப்பு உள்ளது ) .
--- கவியரசு கு. நடேசகவுண்டர் . நியாயக்களஞ்சியம் . என்ற நூலில் .. 15 . 8 . 1985

Friday, May 6, 2011

எத்தனை புத்தகம் ?

நண்பரிடம் இப்படி சொல்லுங்கள் :
1 . உன் பையில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கையை 3 -ஆல் பெருக்கு .
2 . வரும் விடையுடன் 1 -ஐ கூட்டு .
3 . வரும் விடையை 3 -ஆல் பெருக்கு .
4 . வரும் விடையுடன் உன் பையில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கையைக் கூட்டு .
இப்படி சொல்லிவிட்டு, " என் மேஜிக்கைப் பார் இப்போது ! " என்று ' பில்டெப் ' கொடுத்துவிட்டு, " விடையில் முதல் இரு இலக்கங்கள்தான் உன் புத்தகங்களின் எண்ணிக்கை ! விடையின் கடைசி இலக்கம் 3 ! " என்று அசத்துங்கள் . அது நூறு சதவீதம் சரியாக இருக்கும் !
ஒரு உதாரணம் : நண்பரின் பையில் 12 புத்தகங்கள் என்று வைத்துக்கொள்வோம் . அவருக்கு கடைசி விடையாக 123 வரும் . ( 12 பெருக்கல் 3 = 36 , கூட்டல் 1 = 37, பெருக்கல் 3 = 111 ; 111 கூட்டல் 12 = 123 ). இதன் முதல் இரு இலக்கங்கள் புத்தகங்களின் எண்ணிக்கையான 12 ; கடைசி இலக்கம் 3 ! .
--- தினமலர் . செப்டம்பர் 3 , 2010 ..

Thursday, May 5, 2011

நியாயக்களஞ்சியம் .

எவ்வெச் சமயத்தில் பெண்டிரைப் பிறர் காண்பது குற்றமாகாது : நியாயம் .
இராமன் , சீதை இலக்குமணனுடன் காட்டிற்குச் செல்ல அயோத்தி வீதியில் நடக்கும்போது , நகர மக்கள் நீர் பொழியும் கண்ணீனராய் வழியை அடைத்து நின்றனர் . அப்போது இராமன் சீதையை நோக்கி , " மைதிலி உன் முக்காட்டினை நீக்குக " என்று பணித்தான் . அவளும் அங்ஙனமே செய்தாள் . பின் , நகர மக்களை நோக்கிப் , " பெருமக்களே என் மனைவியை , நீர் நிறைந்த உமது விழிகளால் தடையின்றிப் பார்த்துக் கொள்ளுங்கள் ; மகளிரை வேள்வியிலும் , திருமணத்திலும் , ஆபத்திலும் , காட்டிலும் பார்ப்பது குற்றமாகாது " என்றான் .
ஒட்டகமுள் செடி நியாயம் ( உஷ்ட்ர கண்டக நியாயம் ) :
ஒட்டகம் வன்னி முதலிய முள் நிறைந்த தழைகளையும், வேம்பு முதலிய கசப்புத் தழைகளையும் அவற்றால் விளையும் துன்பம் கருதாமல் விரும்பித் தின்னும் . கீழ்மக்கள் நல்லனவிருக்கவும் தீயவைகளினாலுண்டாகும் துன்பத்தையும் பொருட்படுத்தாமல் தம் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வாரகள் .
ஒருவன் உண்டு ஒருவன் கக்கின நியாயம் :
ஒரு நூல் விக்கின மின்றி முடியும் பொருட்டு முதலில் மங்கள வாழ்த்துப் பாட வேண்டும் என்பாரை மறுத்து இந்நியாயத்தைக் கூறுவர் . மங்கள வாழ்த்துடன் தொடங்கிய நன்னூல் நிறைவுபெறாமல் நின்றது . அஃதின்றித் தொடங்கிய தொல்காப்பியம் இனிது நிறைவேறி வழங்குகிறது .
--- கவியரசு கு. நடேசகவுண்டர் . நியாயக்களஞ்சியம் . என்ற நூலில் . 15 . 8 . 1985

Wednesday, May 4, 2011

ஆச்சர்யமான வரலாறு !

வரலாறு ஆச்சர்யங்களால் நிரம்பியது . ஜீன் பால் முல்டர்ஸ் என்கிற பத்திரிகையாளர் , தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் ஹிட்லரின் தம்பி , ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஹிட்லரின் மாமா இருவரிடமும் மரபணுப் பரிசோதனை செய்தார் . ஹிட்லரின் முன்னோர்கள் யூத மற்றும் ஆப்பிரிக்க வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்க , ஆச்சர்யத்தில் வாய் பிளந்தது உலகம் . லட்சக் கணக்கான யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லர் , ஒரு யூத வம்சத்தவர் என்றால் என்ன சொல்வது ?
என்ன கொடுமை ஹிட்லர் !
--- இன்பாக்ஸ் , ஆனந்தவிகடன் 8 / 9 / 2010 .

Tuesday, May 3, 2011

டிப்ஸ்...டிப்ஸ்...

டிப்ஸ்...டிப்ஸ்...
* பால் காய்ச்சிய பாத்திரத்தில் சப்பாத்தி மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும் . எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை ! அதேபோல நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ரசம் செய்யலாம் . அப்பளம் பொரித்த கடாயில் வற்றல் குழம்பையும் , மோர் பாத்திரத்தில் தோசை மாவையும் வைக்கலாம்
* பாகற்காயின் கசப்பை நீக்குவதற்காக காயை வேகவைத்து நீரை வடித்தால் காயின் கசப்போடு சத்துகளும் போய்விடும் . எனவே பாகற்காயை நறுக்கி உப்பு , மஞ்சள் பொடி , வெல்லத்தூள் , எலுமிச்சைச் சாறு விட்டுக் கலக்கி அரைமணி வைத்திருந்தால் கசப்பு காணாமல் போய்விடும் .
* பெரிய அளவில் காபி தயாரிக்கும் போது டிகாஷன் சீக்கிரம் இறங்க வேண்டுமா ? காய்கறி வடிகட்டும் வடிதட்டை, ஒரு அகலமான பாத்திரத்தின் மேல் வைத்து, தட்டின்மீது ஒரு சுத்தமான, மெல்லிய வெள்ளைத் துணியைப் போடுங்கள் . கால் கிலோ காப்பிப் பொடி போட்டு லேசாக அழுத்தி, கொதிக்கும் வெந்நீரைக் கரண்டியால் ஊற்றுங்கள் . ஒத்தாற்போல ஸ்டிராங்கான டிகாஷன் விரைவில் தயார் .
* மாறுதலாக தயிர் பச்சடி செய்ய வேண்டுமா ? ஜவ்வரிசியை சிறிது நெய்யில் வறுத்து ஆறியதும் தயிர், உப்பு, நறுக்கிய கொத்துமல்லி, கீறிய மிளகாய் சேர்த்துக் கடுகு தாளியுங்கள் .ஜவ்வரிசி சற்று ஊறிய பின் சூப்பர் பச்சடி தயார் .
* என்ன ' ஃபிரிட்ஜ்' ஜில் வைத்த சப்பாத்தி மாவு கறுத்து விட்டதா ? அடுத்தமுறை சப்பாத்தி மாவை பிசந்து எவர்சிவர் பாத்திரத்தில் வைப்பதற்குப் பதிலாக பிளாஸ்டிக் டப்பாவில் வைத்துப் பாருங்களேன் . நேற்று வைத்தாற்போல மாவு வெளுப்பாக இருக்கும் !
* கொசுவை விரட்ட உபயோகிக்கும் மேட் தீர்ந்து விட்டதா ? முதல் நாள் உபயோகித்த மேட்டின் மேல் சில துளிகள் வேப்பெண்ணெயை விட்டு, மறுபடி மிஷினில் வைத்து விடுங்கள் .கொசு வராது .
* மண் தொட்டிகளில் செடி வளர்ப்பதானால் இரண்டு வாரங்களுக்கு முன் தொட்டியில் காய்கறி, பழத் தோல்களை போட்டுக் கொண்டே வாருங்கள் . பாதி தொட்டி நிரம்பியதும் தேவையான அளவு மண், பிடி ஆம்பல் கலந்து விட்டு செடி நட்டால் தள தளவென வளரும் . தோல்களின் மேல் மண்ணைப் போட்டு மூடவும் . இல்லையென்றால் ' நாற்றம் ' எனக் கத்துவார்கள், வீட்டிலுள்ளோர் !
* வீடு பெருக்கும் துடைப்பம் கட்டையாகிப் போனால், நாம் உடனே தூர எறிந்து விடுவோம் . அப்படிச் செய்யாமல் அவற்றை ஒரே அளவு சீராக வெட்டி ( ஹேர் -- கட் செய்வது போல ) வைத்துக் கொண்டால், வீட்டு ஜன்னல், அலமாரி போன்ற இடங்களைச் சுத்தம் செய்ய உபயோகமாக இருக்கும் .
-- மங்கையர் மலர் / நவம்பர் 2000 .

Monday, May 2, 2011

மரணப் படுக்கை .

சமஸ்கிருதத்தில் இப்படிச் சொல்வார்கள். ' நீ அழுதுகொண்டே பிறந்தபோது, உன்னைச் சுற்றி இருப்பவர்கள் சந்தோஷமாகச் சிரித்திருப்பார்கள். ஆனால், இறக்கும்போது நீ சந்தோஷமாகக் கண் மூட வேண்டும். அப்போது உன்னைச் சுற்றி இருப்பவர்கள் உன் பிரிவால் கண்ணீர் சிந்த வேண்டும். இதுதான் வாழ்க்கையின் இலக்கணம்.'
மரணப் படுக்கையில் இருந்த ஜார்ஜ் பெர்னாட்ஷாவிடம் , ' நீங்கள் மீண்டும் உங்கள் வாழ்நாளைக் கழிக்க முடியும் என்றால், அதனை எப்படிக் கழிப்பீர்கள் ?' என்று கேட்டார்கள். நீண்ட பெருமூச்சுடன் பெர்னாட்ஷா இப்படிப் பதிலளித்தார். ' இப்படி எல்லாம் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டு , எப்படி எல்லாம் வாழாமல் இருந்தேனோ... அப்படி எல்லாம் வாழ்வேன் !'
சமஸ்கிருத வாக்கியத்துக்கும் பெர்னாட்ஷாவின் கூற்றுக்கும் இடையே ஏதோ ஓர் ஒற்றுமை இழை ஒளிந்திருக்கிறது. அது என்னவென்று கண்டுகொண்டால்... அதுதான் வாழ்க்கைக்கான மந்திரம்.
--- கி. கார்த்திகேயன். ஆ. விகடன் , 14. 04. 2010.

Sunday, May 1, 2011

கணக்கு மேஜிக் !

உங்கள் நண்பர், ஒரு மிகப் பெரிய எண்ணை சொல்லி அது 4-ஆல் மீதியின்றி வகுபடுமா என்று சட்டெனக் கண்டுபிடிக்க சவால் விடுக்கிறார்...
அது ஒற்றை எண்ணாக இருந்தால், வகுபடாது என்று சட்டென சொல்லிவிடலாம். இரட்டை எண்ணாக இருந்தால் கஷ்டம் ? ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் பதில் சொல்லமுடிந்தால் எப்படியிருக்கும்? சந்தோஷம் பொங்குமே ! அப்படி சந்தோஷப்பட இதோ ஒரு ஈஸி டெக்னிக்...
ஒரு எண் : 1234567890. இதன் கடைசி இலக்கத்தின் முந்தைய இலக்கம் 9 . இதை 2ஆல் பெருக்கினால் 18. இதோடு கடைசி இலக்கமான 0-ஐ கூட்டினால் 18. இது , 4ஆல் வகுபடாது . ஆகவே, இந்த எண்ணும் 4-ஆல் வகுபடாது .
இன்னொருஎண் : 12345678930156 . இதன் கடைசி இலக்கத்தின் முந்தைய இலக்கம் 5. இதை 2ஆல் பெருக்கினால் 10 . இதோடு கடைசி இலக்கமான 6-ஐ கூட்டினால் 16. இது நான்கால் வகுபடும் என்பதால் இந்த எண்ணும் 4-ஆல் மீதியின்றி வகுபடும் .
ஈஸி டெக்னிக் : ஒரு எண்ணின் கடைசி இலக்கத்தின் முந்தைய எண்ணை இரண்டால் பெருக்கிவரும் விடையையும் கடைசி இலக்கத்தையும் கூட்டி அந்த கூட்டல் தொகை நான்கால் வகுபடுமா என்று பார்த்தால் போதும் !
--- தினமலர் , மே 21 , 2010 .