Thursday, April 21, 2011

திரும்பிப் பார்ப்போம் !

அது ஒரு விளையாட்டு மைதானம் !
எட்டு சிறுமிகள் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடுவதற்கு தயாராக நிற்கிறார்கள் . விசில் ஊதியவுடன் எல்லோரும் ஓடுகிறார்கள் . அவர்களில் ஒரு சிறுமி கீழே விழுந்து விடுகிறாள் . கால் முட்டியில் சிராய்ப்பு ஏற்பட்டு வலி தாங்காமல் அழ ஆரம்பிக்கிறாள் . ஓடிக்கொண்டிருக்கும் மற்ற ஏழு சிறுமிகளும் நின்று திரும்பிப் பார்க்கிறார்கள் . அப்படியே திரும்பி ஓடி கீழே விழுந்த சிறுமியைத் தூக்கி , நிறுத்தி ஆறுதல் கூறுகிறார்கள் . அனைவரும் அவளை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டு வெற்றிக் கோட்டை நோக்கி மெதுவாக நடக்கிறார்கள் .
பார்வையாளர்கள் ஸ்தம்பித்து போகிறார்கள் . அதிகாரிகள் அதிர்ச்சியில் வாயடைத்துப் போகிறார்கள் . பலர் கண்களில் நீர் வழிகிறது . பார்வையாளர்களின் கரவொலியில் மைதானம் அதிர்கிறது .
சமீபத்தில் ஹைதராபாத்தில் தேசிய மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மையம் நடத்திய ஓட்டப்பந்தயத்தில் கண்ட காட்சிதான் இது . ஆம் , மேலே குறிப்பிட்ட எட்டுச் சிறுமிகளும் மன வளர்ச்சி குன்றியவர்கள்
இதன் மூலம் , அவர்கள் இந்த உலகத்துக்கு என்ன போதிக்கிறார்கள் .
ஒருமைப்பாட்டையா , மனித நேயத்தையா.... எல்லோரும் சமம் என்பதையா... தன்னலமற்று இரு என்பதையா... வெற்றிகரமான மனிதர்கள் , பலவீனமானவர்களுக்கு தோள் கொடுக்க வேண்டும் என்பதையா ?
மன வளர்ச்சி அடைந்தவர்களே.... திரும்பிப் பார்ப்போம் !.
--- வசந்தி குலசேகரன் , சென்னை - 34 . அவள் விகடன் . 10 / 9 / 10. இதழ் உதவி : N. கிரி , ( News Agent Thirunallar ) கொல்லுமாங்குடி .

No comments: