Wednesday, March 30, 2011

குழந்தை பேசவில்லை !

என் குழந்தை பல வாரங்களாகப் பேசவில்லை !
தெற்கே தலைவைத்து நாங்கள் படுத்தது இல்லை
ஊருக்குத் தெற்கே சுடுகாடு இருந்தபோது
தலைவைத்துப் படுக்க
ஒரு திசை இல்லை
இப்போது
ஊரே சுடுகாடாய்
பதுங்கு குழிக்குள்
அழுகிய பிணங்களுடன்
பேசிக்கொண்டு இருந்த என்னுடன்
என் குழந்தை
பல வாரங்களாகப் பேசவில்லை
வெடியோசை
பற்றி எரியும் ஊரகள்
வெட்டி எறியப்பட்ட உடல்கள்
மரண ஓலம்
பிண நாற்றம்
பயம், பீதி, பசி
இவற்றுடன்
பேசாத என் குழந்தை
இதைத் தவிர
என்னுடன் எதுவும் இல்லை
என் வீடு -- வாசல்
என் தாய் -- தந்தை
என் கணவன்
என் மூத்த பிள்ளை
என் உற்றார் உறவுகள்
என் வார்த்தை
என் சுவாசம்
இங்கு எதுவும் எனக்கானது இல்லை
பேசாத என் குழந்தையைத் தவிர
வெள்ளைக் கூடாரத்துக்கு
வந்து சேரும் வரை
முள்வேலிச் சிறைக்குள்
விறைத்த துப்பாக்கிகளின்
கண்காணிப்பில்
எனது உடல்
நொதித்துக்கொண்டு இருக்கிறது
பாழுங்கிணறென !
--- மாலதி மைத்ரி , ஆனந்தவிகடன் . 25. 8. 2010.

No comments: