Sunday, March 27, 2011

வெளி நிறம் ஓர் மதிப்பல்ல !

பள்ளி மணி அடித்ததும்
புள்ளி மான்கள் போலவே
பிள்ளைகள் அனைவரும்
துள்ளி வீடு வந்தனர் .
கண்ணன் என்று ஓர் சிறுவன்
கண்கள் கலங்க வீடுவந்தான்
' கண்ணா ஏன் அழுகிறாய் ? '
கனிவோடு தாய் கேட்டாள்...
' கருங்குருவி என்று பலரும்
கிண்டல் செய்கிறார்களே...
வருத்தமாக இருக்கிறது '
என்று அழுதான் கண்ணனே !
' கறுப்பும் ஒரு நிறம்தானே ?
கண்ணீர்விடத் தேவையில்லை !
உருவத்தில் கறுப்பு இருக்கலாம்...
உள்ளத்தில் கறுப்பு கூடாது !
வெள்ளை உள்ளம் உனக்கிருக்க
வீண் அழுகை உனக்கெதற்கு ? '
அள்ளியணைத்த அம்மாவும்
ஆறுதலாய் அறிவு சொன்னாள் !
' வெளி நிறம் ஓர் மதிப்பில்லை '
உணர்ந்திட்டான் கண்ணனுமே
களித்திட்டான்... கவலைநீங்கி
கலகலவெனச் சிரித்திட்டான் !
--- எம். ஆனந்தி, வேலூர் . தினமலர் . ஆகஸ்ட் 20 . 2010 .

No comments: