Tuesday, March 15, 2011

உதிர்ந்திடும் மந்திரம் !

வயதின் சுருக்கங்களுக்குப் பின்னே
வாழ்வின் பெருக்கங்கள்
வாழ்ந்ததற்கு அடையாளமாக....
தெருவில் எறியப்படுகின்ற
தேய்ந்த எந்திரங்கள்
படித்து முடித்துவிட்ட
பாடப் புத்தகங்கள்....
கவனித்துக்கொள்ள மட்டுமே நாங்கள்
கவனிக்கப்பட அல்ல .
வீசப்படும் வார்த்தைகளுக்கு வலிக்காமல்
தழுவி எடுத்துக்கொள்ளப்
பழகிவிட்டோம் .
விடைகள் கிடைக்காத உள்ளத்தை
உடையாமல் கொண்டு செல்ல
நடையின் வேகம் குறைந்தோம் .
சுமந்து எம்மை மறுநாளில்
கொண்டு சேர்க்க முடியாமல்
தள்ளாடும் நாட்கள் !
நிஜ விழுதுகளில்
ஊஞ்சலாடியதொரு
காலம்.... இன்று
நினைவுகளையே விழுதாய் ஊன்றி
நிற்கின்றோம் நாங்கள் !
முதிர்ந்ததும் உதிர்ந்துவிடும்
மந்திரம் தெரியவில்லை .
முடியாதவற்றிலிருந்து ஒதுங்கும்
இங்கிதமும் அறியவில்லை .
மனவலியின் அழுத்தத்தில்
உடல் வலி மறக்கிறோம் .
உடல் வலியின் உக்கிரத்தில்
மனமிருப்பதையே மறக்கிறோம் .
--- கே. பி. ஜனா, அவள் விகடன் , 27. 8. 2010. இதழ் உதவி : N. கிரி , ( News Agent , திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி .

No comments: