Monday, February 21, 2011

சின்னக் குச்சி !

உங்கள் வீட்டில் செல்லப்பிராணியாக ஒரு யானை வளர்க்கிறீர்கள் . அந்த யானையைக் கட்டிப்போடுவதற்கு எதைப் பயன்படுத்துவீர்கள் ?
தோல் பட்டை ? தாம்புக் கயிறு ? இரும்புச் சங்கிலி ? ..... இவை எதுவும் தேவையில்லை . யானையை ஒரு சின்னக் குச்சியில் கட்டிப் போட்டுவைத்தாலே போதும் . இது என்ன கூத்து ? அத்தனை பெரிய மிருகத்தைக் கட்டிப் போடுவதற்குக் தக்கனூண்டு குச்சியா ? யானை நினைத்தால் அரை நொடியில் அறுத்துக்கொண்டு ஓடிவிடுமே .
உண்மைதான் . ஆனால் , அந்த யானை ' நினைக்க ' வேண்டுமே . அதுதான் மேட்டர் !
சின்ன வயதில் , அந்த யானைக்குட்டியை ஒரு கனமான இரும்புச் சங்கிலியில் பிணைத்து நன்றாகக் கட்டிப்போட்டிருப்பார்கள் . யானைக்குட்டி அதிலிருந்து விடுபடுவதற்கு எவ்வளவோ போராடிப் பார்க்கும் . இழுக்கும் . தள்ளும் , முட்டும் . மொதும் . ஒருபலனும் இருக்காது .
இப்படிக் கொஞ்ச நாள் போராடித் தோற்கிற யானைக்குட்டி , ஒருகட்டத்தில் தன்னால் இந்த பிணைப்பிலிருந்து விடுபடமுடியாது என்று முடிவு செய்துவிடுகிறது . விடுதலைக்கு முயற்சி செய்வதையே நிறுத்திவிடுகிறது .
இப்போது அந்த யானை பல நூறு கிலோ எடை கொண்ட பிரமாண்ட மலைபோல் நிற்கிறது . ஆனால் , இப்போதும் நம்முடைய யானை தப்பி ஓட முயற்சி செய்வதே இல்லை . தன்னைக் கட்டிப் போட்டிருப்பது ஒரு சாதரணக் குச்சிதான் , லேசாக இழுத்தாலே அது விடுபட்டுவிடும் என்பதுகூட அந்த யானைக்குப் புரிவதில்லை .
நம்மில் பலரும் இந்த யானையைப் போல்தான் நமது திறமைகள் என்னன்ன , நம்மால் எதையெல்லாம் சாதிக்கமுடியும் என்பதைப் புரிந்துகொள்ளாமல் , அதிசாதாரணமான மனத்தடைகளுக்கெல்லாம் பயந்து ஒதுங்கி நிற்கிறோம் .
--- குமுதம் , 4 . 8 . 2010 .

No comments: