Friday, November 12, 2010

'முத்து' கோட்டை !

' இந்தியக் கோட்டைகளில் தனிப்பிரகாசத்துடன் ஜொலிக்கும் மகத்தான முத்து ' என்று முகலாயப் பேரரசை ஸ்தாபித்த பாபரை வியக்கவைத்த அழகு பிரமிப்பு எது தெரியுமா ? மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் கோட்டை ! இது, நகரில் இருந்து 100 மீட்டர் உயரத்தில் மலைமீது 3 சதுர கி. மீ., பரப்பில் 10 மீட்டர் உயர சுவர்களுடன் கம்பீரமாகக் காட்சிதரும் அழகே அழகு !
இந்தியக் கோட்டைகளில் அதிக பாதுகாப்பு கொண்ட பிரம்மாண்டமான இதன் அருகில்தான் 1857ன் முதல் சுதந்திரப் புரட்சியின்போது ஜான்சிராணி லட்சுமிபாய்க்கும் பிரிடிஷ் படைகளுக்கும் முக்கியப் போர் நடந்தது .
கி. பி. 8வது நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆட்சிசெய்துவந்த சூரஜ்சிங்கை ஒரு பயங்கர நோய் தாக்கியது . கோபாசல் மலையில் தங்கியிருந்த குவாலிகா என்ற முனிவர் தனது தெய்வீக சக்தியாலும் ஒரு குளத்தின் புனித நீராலும் அவரைக் காப்பாற்றினார் . ' உன் பெயரை சூரஜ் பால் என்று மாற்று, உன் தலைமுறை பால் என்ற பெயரைப் பயன்படுத்தும் வரை இங்கு உங்கள் ஆட்சி நீடிக்கும் ' என்று அருளாசி வழங்கினார் குவாலிகா முனிவர் .
அவருக்கு நன்றிசெலுத்தும் வகையில் அவரது பெயரிலேயே குவாலியர் நகரையும், ஒரு கோட்டை மற்றும் சில கோயில்களையும் உருவாக்கினார் சூரஜ் பால். இவரது தலைமுறையின் 84வது மன்னர், பால் என்ற பெயருக்குப் பதில் வேறுபெயர் சூட்டியதால் தோமார் வம்ச அரசரிடம் ஆட்சியைப் பறிகொடுத்தாராம் . பின்னர் டில்லி லோடிகள், முகலாயர்கள், மராத்தியர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கைக்கு மாறிய இந்தக் கோட்டை, இறுதியாக சிந்தியா வம்சத்தினரிடம் வந்தது.
தோமார் வம்ச ராஜா மான்சிங், 15வது நூற்றாண்டில் குவாலியர் கோட்டையைப் புனரமைத்தார் . மான்சிங் அரண்மனை, மான்சிங் தனது ராணி ம்ருக்னைனிக்காகக் கட்டிய குஜிரி மஹால், கரண் அரண்மனை ஜஹாங்கீர் மஹால் உள்ளிட்ட 6 அரண்மனைகள், சிற்பநுணுக்கங்கள் நிறைந்த 2 விஷ்ணுகோயில்கள், மாமியார் கோயில், மருமகள் கோயில் என்று வித்தியாசமான பெயர்கள் கொண்ட 2 கோயில்கள், ஒரு ஜைனக் கோயில், ராணிகள் கூட்டமாக சதி தீயில் பாய்ந்து உயிர் விட்ட ஜவ்ஹர் குன்ட்; சூரஜ் பாலின் நோயைக் குணப்படுத்திய சூரஜ் ஏரி உள்ளிட்ட பல ஏரிகள் என இந்தக் கோட்டை முழுவதுமே சரித்திர சாட்சிக்கூடமாக ஒளிர்கிறது !
--- தினமலர் , ஜூன் 13 . 2010 .

No comments: