Monday, November 8, 2010

கங்கைகொண்ட சோழபுரம் .

தஞ்சை பெரிய கோவில் போன்ற தோற்றத்திலேயே அமைந்திருப்பது கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சிவன் கோவில் . தஞ்சை பெரியகோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் ( கி.பி . 1014 -- 1044 ) இந்த கோவில் கட்டப்பட்டது .
வடக்கே கங்கை வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக , கங்கையிலிருந்து நீர் எடுத்து வந்து ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்டதுதான் இந்த கோவில் . அதனாலேயே இந்த ஊர் ' கங்கைகொண்ட சோழபுரம் ' ஆயிற்று .
12 நிலைகளைக் கொண்ட இங்குள்ள கோவிலின் ராஜகோபுரம் 172 அடி உயரம் கொண்டது . இது தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தைவிட 12 அடி உயரம் மட்டுமே குறைவானது .இங்குள்ள சிவலிங்கம் 13 அடி உயரம் கொண்டது .
கோவிலின் நுழைவாயிலில் , கோவிலை கட்டிய ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது . தஞ்சை பெரிய கோவில் போலவே , இக்கோவிலுக்கு முன்புறமும் மிகப்பெரிய நந்தி ஒன்று உள்ளது . 12 அடி உயரம் கொண்ட இந்த நந்தி , பெரிய கோவிலைப் போலவே ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாகும் .
மூலவரான சிவபெருமான் தஞ்சை பெரிய கோவிலில் அழைக்கப்படுவது போலவே ' பிரகதீஸ்வரர் ' என்று அழைக்கப்படுகிறார் . எங்கும் இல்லாத சிறப்பாக இந்த கோவிலின் பிரகாரம் எப்போதும் குளிர்ச்சியான சூழ்நிலையில் காணப்படுகிறது . இந்த பிரகாரத்தின் ஓரிடத்தில் அமைக்கப்பட்டுள்ள சந்திரக் காந்தக்கல்தான் இதற்கு காரணம் என்கின்றார்கள் .
--- தினத்தந்தி , 16. 3. 2010. இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு

No comments: