Wednesday, September 1, 2010

' ஹம்பி ! '

கலையும் புனிதமும் கலந்தது ஹம்பி !
பாரதத்தின் பொற்காலத்தைப் பதிவுசெய்த விஜயநகர பேரரசின் தலைநகராகத் திகழ்ந்த இடம் , உலகப் பாரம்பரிய சின்னமான ஹம்பி . இதன் வரலாறு, புனிதமும் வீரமும் கலையும் கலந்த பெருமித்க் களஞ்சியம் .
பெங்களூரில் இருந்து 353 கி.மீ., தொலைவில் , ஹோஸ்பேட் நகரின் அருகில் மலைகள், பள்ளத்தாக்குகளின் மத்தியில் 500க்கும் அதிகமான புராண, சரித்திர நினைவுச்சின்னங்களோடு மிளிர்கிறது ஹம்பி .
பிரம்மனின் மகளான பம்பா , சிவபெருமானின் அருளைப் பெற தவம் செய்த இடம் என்பதால் பம்பா என்ற பெயரைப் பெற்று , பிற்காலத்தில் ஹம்பி என்று மருவியதாக ஒரு ஐதீகம் . இதற்கு ' பம்பா தவம் செய்த பம்பசரோ வரையும் முக்கண்ணனாக சிவபெருமான் காட்சியளித்த விருபாட்சர் கோயிலையும் சாட்சியாக்குகின்றனர் . ஹம்பியின் சுற்றுப்பகுதிதான், ராமாயண கால வாலி , அங்கதன் ஆட்சி புரிந்த கிஷ்கிந்தா என்று ஒரு ஐதீகம் .ரிஷிமுக பர்வதம், ஆஞ்சநேயர் மலை, மாதுங்க முனிவர் மலை என ராமாயண இடங்கள் நிறைந்த ஹம்பியில் அனுமன் சிலைகளும் ஏராளம் . மிகப் பெரிய அனுமன் சிலை, ரங்கர் கோயிலில் உள்ளது . இப்போதும் குரங்குகள் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகின்றன .
இந்த சுற்றுவட்டாரத்தை ஆட்சி செய்த குறுநில மன்னர்களான ஹக்கர் ( ஹரிஹரர் ), புக்கர் என்ற சகோதரர்கள் வேட்டையாடியபோது ஹம்பியில் அவர்களது வேட்டைநாயை ஒரு முயல் துரத்தி விரட்டியதால், இதைத் தலைநகராக்குமாறு அவர்களது குரு வித்யாரண்யர் கூறினார் . ஹம்பி தலைநகரானபின் போர்களில் வாகைசூடி விஜயநகரப் பேரரசை ஸ்தாபித்தனர் என்கிறது சரித்திரம் . கி.பி. 1336 முதல் 1565 வரை மாபெரும் இந்து பேரரசாகத் திகழ்ந்த விஜயநகரப் பேரரசின் புகழ், கிருஷ்ணதேவராயர் காலத்தில் ( 1509 -- 29 ) உச்சம் தொட்டது . பின்னர், முகலாயத் தளபதிகளின் கூட்டணி படையெடுப்பும் ஆறு மாத கொடும் சூறையாடலும் ஹம்பியை சின்னாபின்னப் படுத்தியது .
விருபாட்சர் கோயில், விட்டலர் கோயில், ரங்கர் கோயில், பிரமாண்டமான லக்ஷ்மிநரசிம்மர் சிலை, கல் தேர், தாமரை மண்டபம் என கண்கவர் கலைநுட்பங்கள் நிறைந்த ஹம்பியின் கம்பீர வரலாற்றுக்கு அங்கு நிறைந்துள்ள கல்வெட்டுக்களே மவுன சாட்சியம் !
--- தினமலர் , இணைப்பு .மார்ச் 14 , 2010 .

No comments: