Sunday, August 29, 2010

மக்கள் தீர்மானிக்கட்டும் .

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ( இவிஎம் ) தில்லுமுல்லு செய்ய முடியுமா என்ற கேள்வி மறுபடியும் கிளம்பியிருக்கிறது . முடியும் என்று பத்திரிகையாளர் கூட்டத்தை கூட்டி ' நிரூபித்த ' ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டதால் சந்தேகம் பரவ தொடங்கியிருக்கிறது .
ஹரி பிரசாத் ஆந்திராவை சேர்ந்த கம்ப்யூட்டர் இஞ்சினியர் . நேர்மையான தேர்தலை வலியுறுத்தும் ' விட்டா ' என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் .இவரும் அமெரிக்க பல்கலைக்கழக கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசிரியர் ஒருவரும், பிறருடைய கம்ப்யூட்டர்களில் ஊடுருவி ரகசியங்களை அம்பலப்படுத்தும் நெதர்லாந்து ஜித்தர் ஒருத்தரும் கூட்டணி அமைத்திருக்கின்றனர் . நோக்கம் : இந்திய இவிஎம்களில் மோசடி செய்யமுடியும் என நிரூபிப்பது . இவிஎம்கள் சாதா பேட்டரியில் இயங்கும் . பெரிய பிரோகிராம் எதுவும் கிடையாது . தில்லுமுல்லு செய்ய வாய்ப்பில்லை .
வாய்ப்பு இருக்கிறது என அடித்துச் சொன்ன கட்சிகளுக்கு அதை நிரூபிக்க வாய்ப்பளித்தது தேர்தல் கமிஷன் . யாராலும் முடியவில்லை . இன்று 13 லட்சம் இவிஎம்களுடன் மின்னணு வாக்குப்பதிவில் உலகின் நம்பர் ஒன் நாடு இந்தியா .
இந்த பின்னணியில் பரபரப்பாக டெமோ கொடுத்துள்ளார் ஹரி . அதில் அவர் பயன்படுத்திய இவிஎம் மும்பை அரசு குடோனில் திருடப்பட்டது என தேர்தல் கமிஷன் புகார் கொடுக்க, ஹரி கைதானார் . ஒரு எந்திரத்தை திறக்க முடிந்தால் உள்ளிருக்கும் எதையும் மாற்ற முடியும் . திறக்கவே வாய்ப்பில்லாத சூழலில் தில்லுமுல்லு சாத்தியமில்லை .
ஹரியை விடுவித்து, சர்வகட்சி தலைவர்கள் முன்னிலையில் அவர் டெமோ கொடுக்கவும் அதை பொதுமக்கள் பார்க்க நாடெங்கும் நேரடியாக ஒளிபரப்பவும் தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்ய வேண்டும் . நேர்மை எப்போதும் சோதனைகளுக்கு அஞ்சுவதில்லை .
---தினகரன். தலையங்கம் , ஆகஸ்ட் 27 , 2010 வெள்ளிக்கிழமை .

No comments: