Friday, July 2, 2010

குசேலன் .

திருக்காட்டுப்பள்ளித் தமிழாசிரியராகவும், திருவையாற்று அரசர் கல்லூரி முதல்வராகவும், புதுச்சேரி பிரெஞ்சு இந்தியப் பண்பாட்டுக் கழகத்தின் தமிழாய்வுத்துறைத் தலவராகவும் விளங்கிய திரு .' தமிழ்க்கடல் ' பண்டித வித்வான் தி. வே. கோபாலய்யர் அவர்களின் புலமை, பல்கலைக் கழகங்கள் போற்றும் தனிச் சிறப்புடையதாகும்.
" குசேலன் இருப்தேழு மைந்தர்களைப் பெற்றிருந்தால், முதல், இரண்டு, முன்று புதல்வர்கள் இருபது வயதுக்கு மேல் வளர்ந்திரிருப்பார்களே ? வறுமை எப்படி அவர்கள் குடும்பத்துக்கு வரும் ?" என்று ஒருமுறை சற்று கூர்மையாக அவர்டம் நான் கேட்டேன் . அவர் சிரித்தார் .
" குசேலோபாக்கியானத்தை எழுதியவர் மகா வித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை . அதனை வல்லூர்த் தேவராசர் எழுதியதாக ஒப்புதலளித்து விட்டார் . அவர் பாடிய பாடலில் பிழை இருக்குமா? பாடலைப் படி !" என்றார் .
' ஓரேழ் தலையிட்ட இருபான் மைந்தர்த் தந்தனன் ' என்ற பாடல் அடிக்கு ஒன்பது முறை மக்களைப் பெற்றாள் என்பது பொருள் . தாய் உண்வூட்டும்போது ' ஒரு மகவு கைந்நீட்டும் ! உந்தி மேல் விழுந்து இரு மகவும் கைந்நீட்டும் ' என்ர பாடல் மூலமும் , ' ஒரு மகவு கைந்நீட்ட இருமகவும் கைந்நீட்டும் மும்மகவும் கைந்நீட்டும் ' என்ற தொடர் மூலமும் மும்மூன்று குழந்தைகளாக அவள் ஒன்பது முறை குழந்தைகளைப் பெற்றது புலனாகும். ஆதலால் முதல் மக்களுக்கே பத்து வயதாகவில்லை என்பது புரியும் " என்றார் . அணிசெய் காவியம் ஆயிரம் கற்று , ஆழ்ந்திருக்கும் கவியுள்ளமும் அறிந்த புலவர் பிரான் கோபாலய்யர் .
--- புலவர் இரா. இராமமூர்த்தி. இலக்கியப்பீடம் . ஜனவரி 2010 .

No comments: