Tuesday, February 23, 2010

அலெக்ஸாண்டர் .

உலகம் முழுவதையும் வெற்றி கொள்ள வேண்டும் என்ற வேட்கையுடன் புறப்பட்டவர் அலெக்ஸாண்டர் . பார்சீக நாட்டை வெற்றி கொள்ள அப்பகுதிக்குள் படையோடு நுழைந்தார் அவர் . படையெடுக்கக் காத்திருந்த வேளையில் கடுமையான காய்ச்சல் அவரைத் தாக்கியது . உடன்வந்த அவரின் வைத்தியர்கள் எவ்வளவோ முயன்றும் நோயைக் குணப்படுத்த முடியவில்லை .
' இது இந்த நாட்டுப் பகுதியில் வரும் விஷக் காய்ச்சல் போல் தெரிகிறது . பாரசீக மன்னரின் அரண்மனை வைத்தியர் வந்தால் இந்த நோயைக் குணப்படுத்தி விடுவார் ' என்று அவர்கள் சொன்னார்கள் .
' எதிரி நாட்டு வைத்தியரை நம்பி எப்படி வைத்தியம் செய்ய அழைப்பது ?' என்று பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் . ஆனால் , அலெக்ஸாண்டர் மட்டும் தயங்கவில்லை . பாரசீக மன்னர் தன் எதிரி என்றாலும் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நல்லவர் என்று அவர் நம்பினார் . அரண்மனை வைத்தியர் அழைத்து வரப்பட்டார் . பரிசோதனை செய்தபின் ' இந்த விஷக் காய்ச்சலுக்கு உரிய மூலிகைச் சாற்றை நாளை கொண்டுவருகிறேன் ' என்று சொல்லிவிட்டு , புறப்பட்டுச் சென்றார் அவர் .
மறுநாள் அவர் திரும்புவதற்கு முன்னால் ஒற்றர்கள் மூலம் அலெக்ஸாண்டருக்கு ஒரு செய்தி அனுப்பப்பட்டிருந்தது . ' எதிரி நாட்டு வைத்தியர் கொண்டுவரும் மூலிகைச் சாற்றைக் குடிக்காதீர்கள் . அதில் விஷம் கலக்கப்பட்டுள்ளது ' என்பதுதான் அந்தச் செய்தி .
அந்த வைத்தியர் கொடுதத மருந்தை குவளையில் பிடித்தபடி ஒற்றர்கள் அனுப்பிய தகவலை வைத்தியரிடம் சொன்னார் அலெக்ஸாண்டர் .
வைத்தியர் முகத்தில் அச்சம் பரவியது . ஆனால் , அடுத்த விநாடியே அந்த மூலிகைச் சாற்றை கடகடவென குடித்து விட்டார் அலெக்ஸாண்டர் .
' எப்படி என்னை நம்பி அதைக் குடித்தீர்கள் ?' என்று வைத்தியர் கேட்டபோது , அதற்கு அலெக்சாண்டர் சொன்ன பதில் இதுதான் ...
' பார்சீக மன்னர் எனக்குப் பகைவராக இருந்தாலும் சூழ்ச்சி செய்து என்னைக் கொல்ல மாட்டார் என நம்பினேன் . அரண்மனை வைத்தியரான நீங்களும் தொழில் நேர்மை உள்ளவராக இருப்பீர்கள் எனறு நம்பினேன் . எனவே விஷம் கலக்கப்பட்டிருக்காது என்று எண்ணி தைரியமாகக் குடித்தேன் ' என்றார் .
' பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர் '
என்று வள்ளுவர் சொன்னது இதைத்தான் .
--- இளசை சுந்தரம் . இலக்கியப்பீடம் . அக்டோபர் 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

No comments: