Sunday, February 14, 2010

தங்கச் சாமி !

திருப்பதி வெங்கடாஜலபதிதான் இப்போது உலகத்தின் நம்பர் ஒன் பணக்கார கடவுள் ! வங்கியின் சொத்து மதிப்பு 1 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது . வங்கி டெபாசிட்டுகளில் இருந்து வட்டியாக மட்டும் வருடத்துக்கு 225 கோடி வருகிறது .
தினமும் சுமார் ஒரு லட்சம் பேர் திருப்பதி வந்து செல்கிறார்கள் . வாரத்துக்கு 12 கிலோ தங்கம் கோயில் உண்டியலில் காணிக்கையாக விழுகிறது . இது போக , பக்தி பரவசத்தில் வைரங்களைக் கொட்டிவிட்டுப் போகிற கோடீஸ்வரர்களும் உண்டு . கர்நாடக அமைச்சர் ஒருவர் வைரக் கற்கள் பதித்த ஒரு தங்கக் கிரீடத்தைக் காணிக்கையாகக் கொடுத்தார் . விலை ஜஸ்ட் 4.5 கோடி . பகிரங்கமாகவும் சிலசமயம் ரகசியமாகவும் வரும் காணிக்கைகள் ஒவ்வொன்றுமே மில்லியன் டாலர் நியூஸ் !
கோயிலில் இருக்கும் நகைகளின் மதிப்பு இதுவரை துல்லியமாகக் கணக்கிடப்படவில்லை . என்றாலும் மொத்தம் 12 டன் ( ஒரு டன் என்பது 1,000 கிலோ ) எடையுள்ள நகைகள் இருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது . மொத்த நகைகளையும் நான்கு லாரிகளில் லோடு ஏற்றலாம் . இந்த நகைகளின் சொத்து மதிப்பு மட்டுமே 35 ஆயிரம் கோடியைத் தாண்டும் .
பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் தலைமுடியே வருடத்துக்கு 40 கோடி ரூபாய் வசூல் தருகிறது . திருப்பதி தேவஸ்தானத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் மதிப்பு 1,500 கோடிக்கும் மேல் . பக்தர்கள் கோயிலுக்கு தானமாக வழங்கிய நிலத்தின் மதிப்பு 15 ஆயிரம் கோடிக்கும் அதிகம் .
திருப்பதியில் முன்பு ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு முறைதான் உண்டியலை மாற்றினார்கள் . இப்போது தினமும் 10 தடவைக்கு மேல் உண்டியல் மாற்றப்படுகிறது . ஏழுமலையான் அணிந்திருக்கும் கிரீடம் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் அளித்தது . தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜகான் 100 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தில் சங்கிலி ஒன்றை கொடுத்திருக்கிறார் . இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கை மட்டும் 25 ஆயிரம் பேர் !
--- வேல்ஸ் . ஆனந்தவிகடன் , 14 - 10 - 2009 . இதழுடன் இணைப்பு .

No comments: