Wednesday, December 23, 2009

விகடம் .

ஒருவன் கங்கை ஆற்றில் இறங்கி , ஜலத்தை தன் இரண்டு கைகளாலும் இறைத்துக்கொண்டிருந்தான் . அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த வைதீகர் ஒருவர் இதைக் கண்டு , " அப்பா ! தண்ணீரை ஏன் வீணாய் இறைக்கிறாய் ? " என்றார் .
ஒருவன் : " சென்னையிலுள்ள என் தென்னந்தோப்பு வாடிப் போவதாகக் கேள்விப்பட்டேன் . அதற்காக இக்கங்கை நீரை இறைக்கின்றேன் ."
வைதீகர் : " என்னப்பா ! அடி வண்டல் முட்டாளாக இருக்கிறாயே ! சென்னையிலுள்ள தென்னந்தோப்பிற்கு கங்கையிலிருந்து ஜலம் இறைத்தால் போகுமா ? இந்தச் சொற்ப அறிவுகூட உனக்கு இல்லாமற்போனது பற்றி நான் மிகவும் வருந்துகிறேன் ".
ஒருவன் : " ஓய் வைதீகரே ! கொஞ்சம் நிதானமாய் பேசுங்கள் . சமாசாரம் தெரியாமல் அமாவாசைக்குப் போக வேண்டாம் . சற்று நேரத்திற்கு முன் தாங்கள் நடத்திய காரியம் நினைவிருக்கிறதா ? தர்ப்பணம் செய்வதாகச் சொல்லி நீங்கள் இரண்டு கைகளாலும் அள்ளி அள்ளி இறைத்த கங்கை நீர் , மேக மண்டலம் , சந்திர மண்டலம் , சூரிய மண்டலம் , நஷத்திர மண்டலம் இவைகளையெல்லாம் தாண்டிப் பல கோடி மைலகளுக்குப்பாலுள்ள மோக்ஷலோகத்தில் வசிக்கும் பிதுர்களுகுப் போய் சேர்கின்றபோது சில நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள சென்னைக்கு ஏன் கங்கை நீர் சேரக்கூடாது ? "
-- காலப் பெட்டகம் . 1929 . ஆனந்தவிகடன் .

No comments: