Sunday, August 23, 2009

ஒரு குட்டிக் கதை !

இந்தியத் தலைநகரிலிருந்து வெளிவரும் ' வடக்கு வாசல் ' இதழில் படித்த கதை இது :
அமெரிக்காவில் காட்டின் அருகில் அமைந்த ஒரு கிராமத்தில் புலி ஒன்றின் அட்டகாசம் இருந்தது . என்ன செய்தும் அந்தப் புலியைப் பிடிக்கமுடியவில்லை . அமெரிக்காவில் முப்படைகளாலும் அந்தப் புலியைப் பிடிக்க முடியாத நிலையில் வேற்று நாடுகளிடம் அமெரிக்கா உதவி கோரியது . யு.கே , கனடா , ஃப்ரான்ஸ் , ஜப்பான் ம்ஹூம் யாராலும் முடியவில்லை .
' எங்களைக் கேட்கலியே , நாங்கள் எவ்வளவு புலிகளைப் பிடிக்கிறோம் . இதைப் பிடிக்கமாட்டோமா ? ' என்று ஒரு குரல் . யார் ? இலங்கை அரசுதான் .
இலங்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது .
இலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று . வருடமாயிற்று . போன படை திரும்பவேயில்லை .
கடைசியில் , உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து இலங்கைப் படைகளை மீட்க காட்டுக்குள் சென்றன . நடுக்காட்டில் அவர்கள் கண்ட காட்சி ...
ஒரு மான் தலைகீழாக நெருப்பின் மேல் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது . கீழே இலங்கைப் படையினர் அந்த மானைக் குண்டாந்தடிகளால் தாக்கிக்கொண்டிருந்தனர் . ' ஒப்புக் கொள் . ஒப்புக்கொள் . நீதான் புலி '
உலகப் படையினர் அந்த அப்பாவி மானை விடுவித்து , "ஒரு வருடமாக இதையா கேட்டு உன்னை வதைத்தனர் ?"
அதற்கு அந்த மான் , " பரவாயில்லைங்க , எனக்காவது ஒரு வருஷம் தான் . ஆனா , இலங்கையில 25 வருஷமா இதைத்தான் பண்றாங்க " என்றது .
--- ஆனந்தவிகடன் , 22 - 04 - 2009 .

No comments: