Tuesday, August 11, 2009

' பிரஷ் '

கைதியின் ' பிரஷ் '
கண்டுபிடிப்புகள் எல்லாம் பெரும்பாலும் ஒரு தற்காலிக நிகழ்வால் ஏற்பட்டவையாக இருக்கிறது .
நாம் பல்துலக்கும் பிரஷ்சை உருவாக்கியவர் ஒரு சிறைக் கைதி . அவரது பெயர் வில்லியம் ஆட்டிஸ் . இங்கிலாந்தை சேர்ந்த இவர் 1770-ம் ஆண்டில் கலகத்தை தூண்டியதாக சிறையில் அடைக்கப்பட்டார்.
வித்தியாசமாக சிந்திக்கும் குணம் உடையவர் ஆட்டிஸ் . ஒரு நாள் அப்போதைய வழக்கப்படி துண்டுத் துணியால் பல் தேய்த்தார் . அப்போது அவருக்குள் ஒரு எண்ணம் உதித்தது . உடனே அன்றைய தினம் சாப்பாட்டுக்குக் கொடுக்கப்பட்டதில் இருந்து ஒரு எலும்பு துண்டை தனியாக எடுத்து வைத்துக்கொண்டார் . அவர் தனது எண்ணத்தை வெளிப்படுத்தவே , காவலாளி ஒருவர் மிருகத்தின் ரோமங்களை கொடுத்து உதவினார் . அந்த ரோமங்களை சிறு சிறு குச்சங்களாக சேர்த்து கட்டினார் ஆட்டிஸ் . பின்னர் எலும்புத் துண்டில் துளை போட்டு குச்சங்களை நிறுத்திவைத்தார் . இவ்வாறுதான் பல்துலக்கும் பிரஷ் உருவானது .
ஜெயிலில் இருந்து வெளியே வந்த வில்லியம் ஆட்டிஸ் , தனது பிரஷ் வியாபாரத்தை தொடங்கினார் . அது பலத்த வரவேற்பை பெற்றது .நாளுக்கு நாள் முன்னேற்றத்துடன் பல வடிவங்களை பெற்று வந்தது பிரஷ் . கடந்த நூற்றாண்டில்தான் பீங்கான் , பிளாஸ்டிக் வகை கைப்பிடிகளையும் , நார் குச்சங்களையும் கொண்ட நவீனவகை பிரஷ்கள் பயன்பாட்டுக்கு வந்தது .
அவரது கண்டுபிடிப்பு ஆள்காட்டி விரலுக்கு ஒரு வேலையை மிச்சப்படுத்திவிட்டது . இருந்தாலும் ஆட்டிஸ் காலத்துக்கு முன்பே வேர் , விழுதுகள் , குச்சிகளால் பல் துலக்கும் பழக்கம் உடையவர்கள் நமது முன்னோர்கள் என்பது கூடுதல் தகவல் .
--- தினத்தந்தி , 21 - 03 - 2009 .

No comments: