Thursday, July 16, 2009

எஸ்.பி.ஒய் .( SBY).

' ஐம்புலன்களில் உள்ள நரம்புகள் அனைத்தும் சேரும் இடம் காது . அதனால்தான் நம் முன்னோர்கள் காதுக்கு நிறைய முக்கியத்துவம் தந்தார்கள் . காது குத்துவது , காதுகளில் கடுக்கண் , தொங்கட்டான் அணிவது எல்லாம் இதற்காகத்தான் . கோயில்களில் தோப்புக்கரணம் போடுவதுகூட அப்படிதான் . தினமும் பதினோரு தோப்புக்கரணங்களைப் போட்டால் நிச்சயம் நமது ஞாபக சக்தி அதிகரிக்கும் ' என்கிறார் யோகாவில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றிருக்கும் மூர்த்தி .
உலகப் பிரசித்தி பெற்ற யேல் பல்கலைக்கழக மருத்துவப் பிரிவில் , மூளையின் செயல் திறனை அதிகரிக்க ஒரு பயிற்சியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் . வலது கையால் இடது காது நுனியை அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும் . பிறகு இடது கையால் வலது காது நுனியை அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும் . இரண்டு காதுகளுக்கும் சமச்சீரான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் . காதுகளை நன்றாகப் பிடித்துக் கொண்டபிறகு உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திரிக்க வேண்டும் . தினமும் கால் மணி நேரம் இந்தப் பயிற்சியைச் செய்தால் மூளையின் சக்தி அதிகரிக்கிறது என்கிறார்கள் . இவர்கள் இப்படிச் சொன்னதும் அமெரிக்காவே இந்தப் பயிற்சியைச் செய்துகொண்டிருக்கிறது .
அட , இந்தப் பயிற்சி நம்ம தொப்புக்கரணம்தானே என்று தோன்றுகிறதா ? கரெக்ட் தோப்புக்கரணம் தான் . ஆனால் , இதற்கு யேல் பல்கலைக் கழகத்து ஆராய்ச்சியாளர்கள் வைத்திருக்கும் பெயர் எஸ,பி.ஒய்.
( SBY ) அதாவது 'சூப்பர் ப்ரைன் யோகா' .
' இப்படி காதுகளுக்கு அழுத்தம் கொடுத்து அமர்ந்து எழும்போது ரத்தம் ஓட்டம் சீரடைகிறது . காது நுனிகளில் மூளைக்குச் செல்லும் ரத்தத்தை அதிகரிக்கச் செய்யும் மெல்லிய ரத்தக் குழாய்கள் இருக்கின்றன . அங்கே அழுத்தம் கொடுக்கும்போது , அவை புத்துணர்வு பெற்று ரத்த ஓட்டத்தை அதிகரிகச் செய்கிறது . வலது காது நுனி இடது மூளைக்கும் , இடது காது நுனி வலது மூளைக்கும் ரத்தத்தைச் செலுத்துகின்றன ' என்கிறார் யோகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் யுஜினியஸ் ஆங் .
ஆக , இனி எல்லோரும் தினமும் தோப்புக்கரணம் போடுவோம் . அமெரிக்கர்களே சொல்லிவிட்டார்கள் அல்லவா ? நாம்தான் நம் முன்னோர்கள் பேச்சைக் கேட்க மாட்டோமே .
--- குமுதம் . 25 - 03 - 2009 ..

No comments: